மர்ம நபர்
மர்ம நபர் ட்விட்டர்
இந்தியா

பெங்களூரு குண்டுவெடிப்பு: தப்பிச் செல்லும் சந்தேக நபர்.. புதிய வீடியோவை வெளியிட்ட என்.ஐ.ஏ.!

Prakash J

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு வைட் பீல்ட் அருகில் உள்ள, குந்தலஹாலி பகுதியில் இயங்கிவரும் பிரபல ’ராமேஸ்வரம் கபே’ உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி மதியம் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இந்த விபத்தில் உணவகத்தில் பணிபுரிந்த 3 பேர், சாப்பிட வந்த பெண் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி ஆதாரங்களைச் சேகரித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தப்பிச் சென்ற மர்ம நபர் குறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். தவிர, அந்த மர்ம நபர் பற்றி தகவல் தெரிவிப்பருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்பிருப்பதாகச் சந்தேகப்படும் தடை செய்யப்பட்ட பாப்புலர் ப்ரெண்ட் ஆப் அமைப்பில் செயல்பட்ட சிலரை, சிறையில் இருந்து எடுத்து நீதிமன்றக் காவலில் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதற்கிடையே ஹோட்டலில் குண்டுவைத்து தப்பிச் சென்ற மர்மநபர் பற்றிய வீடியோவையும் அவ்வப்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் வெளியிட்டு, அவரைப் பற்றிய தகவல்களையும் உறுதி செய்துவருகின்றனர். அந்த மர்ம நபர், குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது மார்ச் 1ஆம் தேதி பஸ்ஸில் பயணித்த வீடியோ வெளியிடப்பட்டு அது இணையதளங்களில் வைரலாகி இருந்தது.

இந்த நிலையில், தற்போதும் அந்த சந்தேக நபர் பற்றிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் அந்த புதிய வீடியோவில் சம்பவம் நடந்த அன்று இரவு (மார்ச் 1), அந்த நபர் முகத்தை மறைத்தபடி, சாம்பல் நிற சட்டை அணிந்துள்ளார். வீடியோவில் எதையோ தேடுவதுபோல் தெரிகிறது. பின்பு வந்த வழியிலேயே செல்கிறார். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.