உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. அம்மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி உள்ளார். இம்மாநிலத்தில் பாஜக அரசு பல்வேறு அதிரடி சட்டங்களை இயற்றிவருகிறது. அந்த வகையில், பாஜக ஆளும் உத்தரகாண்டில் நாட்டிலேயே முதல் முறையாக பொது சிவில் சட்டம் கடந்த ஜனவரி 27ஆம் தேதி அமலுக்கு வந்தது. உத்தராகண்டில் அமலுக்கு வந்த இச்சட்டத்தின்படி, திருமணம், விவாகரத்து, லிவ்-இன் உறவு, உறவு முறிவு ஆகியவற்றை அரசிடம் பதிவு செய்வது கட்டாயமாகும். இதுகுறித்து ஒரு மாதத்துக்குள் அரசிடம் பதிவு செய்யத் தவறினாலோ அல்லது தவறான தகவல்களை வழங்கினாலோ சிறைத்தண்டனையோ அல்லது ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உத்தரகாண்ட்டில் வெளிமாநிலத்தவர் நிலம் வாங்க தடை விதிக்கும் புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்ற அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
உத்தரகாண்ட் மக்கள் மாநிலத்தில் நிலம் வாங்கும் தனிநபர்களுக்கு வரம்புகள் விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் மாநிலத்தில் புதிய நிலச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான தனது திட்டத்தை முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்தார். இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் விவசாய மற்றும் தோட்ட நிலங்களை வெளிமாநிலத்தவர் வாங்க தடை விதிக்கும் புதிய சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை நடப்பு நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரிலே சட்டமாக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் தாமி எக்ஸ் தளப் பக்கத்தில், “மாநில மக்களின் நீண்டகால கோரிக்கையையும் அவர்களின் உணர்வுகளையும் முழுமையாக மதித்து, இன்று அமைச்சரவை கடுமையான நிலச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மாநிலத்தின் வளங்கள், கலாச்சார பாரம்பரியம் மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதோடு, மாநிலத்தின் அசல் அடையாளத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், “எங்கள் அரசாங்கம் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் முழுமையாக உறுதியாக உள்ளது, அவர்களின் நம்பிக்கையை ஒருபோதும் உடைக்க விடமாட்டோம். இந்த முடிவு, நமது மாநிலத்தையும் கலாசாரத்தையும் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்பதை தெளிவுபடுத்துகிறது. நிச்சயமாக, இந்த சட்டம் மாநிலத்தின் அசல் வடிவத்தைப் பராமரிப்பதிலும் உதவியாக இருக்கும்" என முதல்வர் தெரிவித்துள்ளார்.