UPI  FB
இந்தியா

இன்று முதல் UPIல் புதிய விதிமுறைகள்.. என்னென்ன தெரியுமா?

UPI பரிவர்த்தனைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) புதிய விதிகளை இன்று முதல் (ஆகஸ்ட் 01ஆம் தேதி) செயல்படுத்துகிறது.

Vaijayanthi S

யுபிஐ பயன்படுத்துவோருக்கான புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த புதிய விதிகளின்படி, இனி, ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 முறை மட்டுமே வங்கி இருப்பைச் சரிபார்க்க முடியும். யுபிஐ ஆட்டோபே சேவைகளுக்கான பணம் பிடித்தம், காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் நடக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருபரிவர்த்தனை தோல்வியடைந்தால் , அதன் நிலையை மூன்று முறை மட்டுமே சரிபார்க்க முடியும். இந்த மாற்றங்கள், யுபிஐ பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பானதாகவும், திறமையானதாகவும் மாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் (ஆகஸ்ட் 1) UPI-யில் பல மாற்றங்கள் செய்யப்படும் என்று தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் பணம் அனுப்பும் வங்கிகள், பயனாளி வங்கிகள் மற்றும் PhonePe, Google Pay மற்றும் Paytm போன்ற கட்டண சேவை வழங்குநர்களுக்கு (PSPs) பயனளிக்கும் என்று இதுகுறித்து வெளியான சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு UPI அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பணப்பயன்பாடு படிப்படியாக குறைய தொடங்கியது. ஒரு மாத்திற்கு 18 பில்லியனுக்கும் அதிமான பரிவர்த்தனைகள் UPI மூலம் செய்யப்படுகிறது. சமீபத்தில், சர்வதேச நாணய நிதியம் (IMF) கூட இந்தியாவைப் பாராட்டியுள்ளது. UPI இன் விரைவான வளர்ச்சியுடன்,மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா வேகமாக பண பரிவர்த்தனை செய்வதாகவும், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உள்ளிட்டவற்றின் பயன்பாடுகள் குறைந்து வருவதாகவும் தெரிவித்திருந்தது.

ஆகஸ்ட் 1 முதல் UPI ல் வரப்போகும் அதிரடி மாற்றங்கள் என்னென்ன

இந்நிலையில், இன்று முதல் (ஆகஸ்ட் 01) UPI-யில் பல மாற்றங்கள் செய்யப்படும் என்று NPCI ஏற்கனவே அறிவித்திருந்தது..அது என்னென்ன மாற்றங்கள்? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..

1. நிலுவையில் உள்ள பரிவர்த்தனையின் நிலையை ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே சரிபார்க்க முடியும், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இடையில் குறைந்தபட்சம் 90 வினாடிகள் இடைவெளி இருக்கும்.

2. தானியங்கி பணம் செலுத்தும் பரிவர்த்தனைகள் குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் செயல்படுத்தப்படும். காலை 10 மணிக்கு முன், பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 9:30 மணிக்குப் பிறகும் செயல்படுத்தப்படும் .

3. பயனர்கள் தங்கள் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும்.

4. 30 நாட்களில் அதிகபட்சமாக 10 கட்டணங்களை திருப்பி அனுப்ப கோரிக்கைகளை எழுப்பலாம். 5 பயனர்கள் என்ற இடைவெளியில் அனுப்பலாம்.

5. கட்டணத்தை உறுதி செய்வதற்கு முன் பெறுநரின் பதிவு செய்யப்பட்ட வங்கிப் பெயர் மற்றும் விவரம் காண்பிக்கப்படும். இதனால் , பிழைகள் மற்றும் மோசடிகள் குறைக்கப்படும்.

6. நாளைக்கு அதிகபட்சம் 50 முறை மட்டுமே வங்கி இருப்பைச் சரிபார்க்க முடியும்.

7. ஒரு பரிவர்த்தனை தோல்வியடைந்தால், அதன் நிலையை மூன்று முறை மட்டுமே சரிபார்க்க முடியும்.