New crude oil reserves  Andaman Sea
இந்தியா

இந்தியாவுக்கு கிடைத்த பெரும் புதையல்.. கடலில் மறைந்திருக்கும் அமுதசுரபி! எண்ணெய் தேவைக்கு FullStop!

அந்தமான் கடலில் கண்டறியப்பட்டுள்ள புதிய கச்சா எண்ணெய் இருப்பு குறித்தும், அதனால் இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்படும் நன்மை பற்றியும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Praveen Joshva L

இந்தியாவின் மொத்த இறக்குமதியில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் பிற பெட்ரோலியப் பொருட்களே சுமார் 30% முதல் 35% வரை பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக இந்தியாவின் பெரும்பாலான அந்நிய செலாவணி கையிருப்பு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கே சென்று வருகிறது. இந்தியாவின் நாணய மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்திக்கவும், இந்தியாவில் உள்நாட்டு சந்தையில் பொருள்களின் விலை உயரவும் இதுவே முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு சொந்தமான அந்தமான் கடல் பகுதிகளில் ஏராளமான அளவு கச்சா எண்ணெய் இருப்பு இருப்பதை இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ONGC (Oil and Natural Gas Corporation) நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இது இந்தியாவின் கச்சா எண்ணெய் பற்றாக்குறைக்கு தீர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ONGC நிறுவனம் கடத்த சில ஆண்டுகளாக அந்தமான் கடல் பகுதியில் மூன்று இடங்களில் பல ஆயிரம் மீட்டர் ஆழத்தில் துளையிட்டு கச்சா எண்ணெய் இருப்பு குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் 3-ல் இரண்டு இடங்களில் கச்சா எண்ணெய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் அதிகம் ஆழம் கொண்ட கடல் பகுதியில் இது இருப்பதால், இதனை வெளியே எடுக்க அதிக செலவாகும் என்பதோடு, இதற்கான முழு தொழில்நுட்பங்களும் இந்திய நிறுவனங்களிடம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் கச்சா எண்ணெய் எடுப்பதற்கான பணிகளில் 100% வெளிநாட்டு நிறுவனங்களையும் இணைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டால் அதனால் இந்தியாவின் இறக்குமதி 30 சதவீதம் வரை குறைவதோடு, உள்நாட்டு சந்தையில் பொருள்களின் விலையும் கடுமையாக குறையும். அதோடு இந்திய நாணயத்தின் மதிப்பும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் எதிர்காலத்தில் இங்கு கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டாலும், அதற்கு கடலின் மேல் நிலையாக நிற்கும் ராட்சச எண்ணெய் டேங்கர்களை நிலைநிறுத்தவேண்டும். 2 கிலோமீட்டர் வரை ஆழம் கொண்ட கடலின் கீழ் பல ஆயிரம் மீட்டர்கள் துளையிட்டு கச்சா எண்ணெய் எடுக்கவேண்டும். அதுமட்டுமன்றி கடலில் இருந்து எடுத்த எண்ணெயை கொண்டுவர பல ஆயிரம் நீளத்துக்கு பைப்புகளையும் அமைக்க வேண்டும். அதிலும் அந்தமான் கடல் பல்வேறு புயல்கள் உருவாகும் பகுதியில் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக இந்த பகுதியில் இருந்து எடுக்கப்படும் ஒரு பேரல் கச்சா எண்ணெய் எடுக்கத் தோராயமாக 40 முதல் 50 டாலர்கள் வரை செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் தற்போது சந்தை விலையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலர் வரை விற்பனையாகும் நிலையில், இது லாபகரமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய்

அதே நேரம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் ரஷ்யா - உக்ரைன் போர் காலம் வரை ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 50 டாலர்களுக்கு உள்ளேயே இருந்ததுடன், சில நேரங்களில் 20 டாலர் வரை சரிந்தது. அப்படி ஒரு சூழல் எதிர்காலத்தில் ஏற்பட்டால் அந்தமான் கடலில் இருந்து எடுக்கும் கச்சா எண்ணெயிடமிருந்து கிடைக்கும் வருவாயை விட செலவு அதிகம் ஏற்படலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு எண்ணெய் எடுக்க தனியார் நிறுவனங்கள் முன்வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.