war ships  web
இந்தியா

இந்திய கடற்படைக்கு புதிய வலிமை.. 3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு அர்ப்பணித்த மோடி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 3 அதிநவீன போர்க்கப்பல்களை கடற்படையில் இணைத்து, இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புத் திறனை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார் பிரதமர் மோடி.

PT WEB

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஐஎன்எஸ் துணாகிரி ஸ்டெல்த் போர்க்கப்பல், ஐஎன்எஸ் சன்சோதக் ஆய்வுக்கப்பல், ஐஎன்எஸ் அக்ரே நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பல் ஆகிய மூன்று அதிநவீன கப்பல்களை கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். இதில் 75%க்கும் மேற்பட்ட உள்நாட்டு கூறுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

செய்தியாளர் - m. மீரா

இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட 3 அதிநவீன கடற்படைக் கப்பல்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 22) கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் கடற்படையில் இணைத்தார்.

ஐஎன்எஸ் துணாகிரி என்ற அதிநவீன ஸ்டெல்த் போர்க்கப்பல், ஐஎன்எஸ் சன்சோதக் என்ற ஆய்வுக்கப்பல் மற்றும் ஐஎன்எஸ் அக்ரே என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் ஆகிய கப்பல்களை மோடி இன்று கடற்படையில் இணைத்துள்ளார்.

INS Dunagiri

ஐஎன்எஸ் துணாகிரி - எதிரிகளின் இலக்குகளைத் தவிடுபொடியாக்கும் வகையில் ஐஎன்எஸ் துணாகிரி ப்ராஜெக்ட் 17ஏ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஐந்தாவது அதிநவீன ஸ்டெல்த் ரகப் போர்க்கப்பலாகும். எதிரிகளின் ரேடார்களில் எளிதில் சிக்காத அதிநவீன வடிவமைப்பைக் கொண்டது.

ஐஎன்எஸ் சன்சோதக் - கடல்சார் வரைபடங்களை உருவாக்கும் ஐஎன்எஸ் சன்சோதக் பெரிய ரக ஆய்வுக் கப்பல்கள் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள நான்காவது கப்பலாகும். ஆழ்கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் விரிவான நீர்நிலை ஆய்வுகளை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

INS sanshodhak

ஐஎன்எஸ் அக்ரே - நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடும் வகையில் ஐஎன்எஸ் அக்ரே அர்னாலா கிளாஸ் திட்டத்தின் கீழ் ஆழமற்ற கடற்பகுதிகளில் இயங்குவதற்காகத் தயாரிக்கப்பட்ட நான்காவது நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பல் ஆகும். எதிரிகளின் அணுசக்தி மற்றும் சாதாரண நீர்மூழ்கிக் கப்பல்களைக் கடலுக்கு அடியிலேயே கண்டறியும் இக்கப்பல் அதிநவீனத் தாக்குதல் ஆயுதங்களைக் கொண்டுள்ளது.

கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த மூன்று கப்பல்களும், இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று கடல்சார் தளவாடங்களும் 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது மிக முக்கிய சிறப்பம்சமாகும்.

இந்த பிரம்மாண்ட திட்டத்தின் கட்டுமானப் பணிகளில் இந்தியாவின் 200க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் நேரடியாகப் பங்களித்து, உள்நாட்டு வேலைவாய்ப்புகளையும் உற்பத்தித் திறனையும் பெருமளவில் உயர்த்தியுள்ளன.