எவரெஸ்ட்
எவரெஸ்ட்  முகநூல்
இந்தியா

எவரெஸ்ட் சிகரம் ஏறுவோர் உயிர்காக்க ‘மின்னணு சிப்’ அறிமுகம் செய்யும் நேபாள் அரசு!

ஜெனிட்டா ரோஸ்லின்

இந்தியாவின் வடக்கே அரண் போல அமைந்திருக்கும் மலைதான் எவரெஸ்ட். உலகின் மிக உயரமான மலைச் சிகரமான இமயமலையில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரத்தில், எப்படியாவது ஏறிவிட வேண்டும் என்பது பெரும்பாலானவர்களுக்கு வாழ்நாள் லட்சியமாகவே இருக்கும்.

எவரெஸ்ட் சிகரம்

ஆனால் அவ்வளவு எளிதான விஷயம் இல்லை அது. ஏறியவர்களின் அனுபவமே அதற்கு சாட்சி. இதில் ஏறி சாதனை செய்தவர்கள் ஒருபக்கம் எனில், வழியில் உயிரிழிந்தோர் இன்னொருபக்கம்...

இமயமலைத் தொடரில் சீனா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் உள்ள உலகின் உயரமான மலைச்சிகரம், இந்த எவரெஸ்ட். இதன் உயரம் 8,849 மீட்டர். அதாவது, 29,032 அடி. இதன் வடக்கில் திபெத்தும், தெற்கில் நேபாளமும் உள்ளன.

எவரெஸ்ட் பேஸ் கேம்ப் (Everest base camp) பகுதியில் ஏற்படும் பனிப்புயல், பனிச்சரிவுகள், வானிலை மாற்றம் போன்றவை சிகரத்தை தொட நினைக்கும் வீரர்களுக்கு எப்பொழுதும் பெரிய சவாலாகவே இருக்கும். பலர் வெற்றிகரமாக உச்சியை அடைந்த போதிலும் சிலர் பரிதாபமாக தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர்.

1953 முதல் இதுவரை ஏறத்தாழ 300 நபர்கள் எவரெஸ்ட்டில் ஏறநினைத்து உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மேற்கொண்டு இப்படியான அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க, சிகரம் ஏறும் வீரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது நேபாள அரசு. இதற்காக புதியதொரு திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசியுள்ள நேபாள சுற்றுலா துறை தலைமை அதிகாரி ராகேஷ் குருங் தெரிவிக்கையில், “எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறும் வீரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் மலையேறும் வீரர்களுக்கு அவர்களின் உடையில் அணிந்து கொள்ளும் வகையில், கட்டண முறையில் அரசாங்கத்தால் மின்னணு சிப் வழங்கப்படும். இதன்மூலம் அவசர காலங்களில் காணாமல் போனவர்களை தேடும் பணியை விரைவாகவும் எளிதாகவும் செய்ய இயலும். இதில் ஒரு சிப்பின் விலை தோராயமாக $10-$15 (ரூ. 800 - 1,300 வரை) வரை இருக்கும். கட்டாயம் இதை அவர்கள் அணியவேண்டியிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த முன்னெடுப்பு சிகரம் ஏற நினைக்கும் விரர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.