2026 NEET-UG தேர்வில் வினாத்தாள் கசிவு, மதிப்பெண் குளறுபடிகள், கோடிக்கணக்கில் பணம் கைமாறிய மோசடி நெட்வொர்க் காரணமாக நாடு முழுவதும் சர்ச்சை வெடித்த நிலையில், ரத்து செய்யப்பட்ட தேர்வு ஜூன் 21, 2026 அன்று மீண்டும் நடத்தப்பட உள்ளது.
ஜூன் 21-ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான நீட் இளநிலை மருத்துவப் பொது நுழைவுத் தேர்வை, கணினி வழித் தேர்வாக நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த அவசர மனுவானது நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய பகுதி-வேலை நாள் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது, இந்த விவகாரத்தை இப்போதைக்கு அவசரமாக விசாரிக்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், கோடை விடுமுறைக்குப் பிறகு இந்த வழக்கை பட்டியலிட உத்தரவிட்டனர்.
விசாரணையின் போது நீதிபதி பி.எஸ். நரசிம்மா "அவர்கள் (தேசிய தேர்வு முகமை - NTA) தற்போது தேர்வை மறுபடியும் நடத்துகிறார்கள். அவர்களுக்கு எந்த மாதிரியான பணி அழுத்தம் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, இந்த வழக்கை நீதிமன்ற விடுமுறைக்குப் பிந்தைய நாள்களுக்கு ஒத்திவைக்கிறோம்." பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு, தற்போது ஜூன் 21, 2026 அன்று மீண்டும் நடத்தப்படவுள்ள நீட் தேர்வை, முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு கணினி வழியிலான (CBT) தேர்வாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், திட்டமிட்டபடி ஜூன் 21 அன்று தேர்வு நடப்பதில் எவ்வித மாற்றமும் இருக்காது என்பது உறுதியாகியுள்ளது.
2026 ஆம் ஆண்டு NEET-UG மருத்துவ நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் மற்றும் மதிப்பெண் குளறுபடிகள் காரணமாக நாடு முழுவதும் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இதன் விளைவாக மே 2026 இல் நடத்தப்பட்ட NEET-UG தேர்வு ரத்து செய்யப்பட்டது.
ராஜஸ்தான் மற்றும் பிற மாநிலங்களில் தேர்வு நடப்பதற்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், கோடிக்கணக்கில் பணம் கைமாறிய வினாத்தாள் மோசடி நெட்வொர்க் பின்னணியில் இருந்தது அம்பலமாகியுள்ளது.
ராஜஸ்தான் காவல்துறை மற்றும் மத்தியப் புலனாய்வுப் பிரிவு இணைந்து நடத்திய சோதனையில் இதுவரை பல இடைத்தரகர்கள் மற்றும் மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.