Model Image x page
இந்தியா

NCERT 9ஆம் வகுப்பு புத்தகத்தில் ‘மதச்சார்பின்மை’ நீக்கம்.. வெடித்த புதிய சர்ச்சை!

1975-77 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் விதிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனம் குறித்து 'மக்களாட்சிக்கான சவால்கள்' என்ற தலைப்பின் கீழ் புதிய பகுதி முதன்முறையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

Prakash J

2026-27 கல்வியாண்டுக்கான என்.சி.இ.ஆர்.டி (NCERT) 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , 2026-27 கல்வியாண்டிற்காக அண்மையில் வெளியிட்ட புதிய 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் 'மதச்சார்பின்மை' மற்றும் இந்திய அரசியலமைப்பின் 'முகவுரை' தொடர்பான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய 9ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், 'அரசியலமைப்பு வடிவமைப்பு' என்ற தனி அத்தியாயம் இருந்தது. அதில் அரசியலமைப்பு முகவுரை விரிவாகக் அச்சிடப்பட்டு, மாணவர்களுக்கு இறையாண்மை, சோசலிசம், மதச்சார்பின்மை போன்ற முக்கியக் கலைச்சொற்களின் விளக்கங்கள் கற்பிக்கப்பட்டன. ஆனால், தற்போது அவைகள் நீக்கப்பட்டு, 1975-77 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் விதிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனம் குறித்து 'மக்களாட்சிக்கான சவால்கள்' என்ற தலைப்பின் கீழ் புதிய பகுதி முதன்முறையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

model image

குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டது மற்றும் பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டது குறித்து இதில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தின் பணிகளை விளக்கும் பகுதியில், 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களைச் சேர்க்கும் 'சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) முறை சேர்க்கப்பட்டுள்ளது. 'நெருக்கடி நிலையின் கருப்புப் பக்கங்களை மாணவர்கள் அறியவே இந்த மாற்றம்' என மத்திய அரசும் சொல்லும் வேளையில், ”முகவுரையையும், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு அடித்தளமான 'மதச்சார்பின்மை' என்ற கொள்கையையும் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கியது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மையைக் குறைத்து மதிப்பிடும் செயல்” என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.