
NCERT பள்ளிப் பாடப் புத்தகங்களில் இருந்து தங்கள் கருத்தியலுக்கு 'ஒவ்வாத' பல்வேறு விஷயங்களை நீக்குவதை இன்றைய மத்திய அரசு வழக்கமாக வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகளாலும் கல்வியாளர்களாலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் நடந்த அதிமுக்கியமான நீக்கம், அபுல் கலாம் ஆசாத் பற்றியது. இந்திய சுதந்திரப் போராட்ட வீரராகவும் காங்கிரஸ் தலைவராகவும் பல வருடங்கள் இயங்கியவர் அபுல் கலாம் ஆசாத். இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகவும் பணியாற்றியவர்.
அப்படிப்பட்டவரின் பாடப் பகுதியை மத்திய அரசு நீக்கியிருப்பது மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது. அவரது பெயர் மற்றும் அவர் பற்றிய குறிப்புகள் 11ஆம் வகுப்பு பாடப் புத்தக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
'Constitution — Why and How' என்று தலைப்பிடப்பட்ட பகுதியில், அரசியல் நிர்ணய சபைக் குழுவில் இடம்பெற்றவர்களின் பெயர் வரிசையில் அபுல் கலாம் ஆசாத் பெயர் நீக்கப்பட்டுள்ளது. தற்போது, ”வழக்கமாக ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், சர்தார் பட்டேல், அம்பேத்கர் இந்தக் குழுவில் இடம்பெற்றனர்” என்று திருத்தப்பட்டுள்ளது.
இதில் முக்கிய விஷயம் என்னவெனில், வழக்கமாக இப்படிப்பட்ட நீக்கங்கள் குறித்த தனியான அறிக்கையை NCERT பதிப்பிக்கும். ஆனால் இந்த முறை அவர் பெயர் நீக்கப்பட்டது அமைதியாக, சத்தமின்றி நடந்திருக்கிறது.
ஏற்கெனவே மகாத்மா காந்தி, முகலாயப் பேரரசு உள்ளிட்ட பாடப் பகுதிகளை NCERT நீக்கியிருந்தது குறித்து கடுமையான சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.