மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் இன்று நடைபெறுகிறது. தொழிலாளர் சட்டங்களை நீக்கக்கோரி, நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் சார்பில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.
மாநில அரசுகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் நிறைவேற்றப்பட்ட 4 தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மின்சார சட்டத்தை திருத்தக் கூடாது, வங்கி ஊழியர்களுக்கு வாரம் 5 நாட்கள் மட்டும் வேலை அரசுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் தாரைவார்க்கும் முடிவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஊரக வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதைக் கண்டித்தும், நாடு தழுவிய அளவில் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இந்தப் போராட்டத்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய சங்கங்கள், மாணவர்கள் அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் கணிசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் மற்றும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன. இதனால் அரசுப் பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயங்க வாய்ப்புள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் இதில் பங்கேற்பதால், பொதுத்துறை வங்கிகளில் பணப்பரிவர்த்தனை மற்றும் காசோலை பரிமாற்றம் பாதிக்கப்படலாம். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த வேலைநிறுத்தத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளன.