நாராயண மூர்த்தி
நாராயண மூர்த்தி புதிய தலைமுறை
இந்தியா

இந்தியாவின் இளம்வயது கோடீஸ்வரர்! 4 மாத பேரக்குழந்தைக்கு ரூ240 கோடி கிப்ஃட் கொடுத்த நாராயண மூர்த்தி!

Prakash J

இந்தியாவில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று, இன்ஃபோசிஸ். இந்த நிறுவனத்தின் நிறுவனராக இருப்பவர் என்.ஆர். நாராயண மூர்த்தி. இவருடைய மனைவி சுதா மூர்த்தி. இவருக்குத்தான் தற்போது மத்திய அரசு மாநிலங்களவை எம்பி வழங்கியிருந்தது.

இந்த நிலையில் நாராயண மூர்த்தி - சுதா தம்பதிகளின் மகன் ரோகன் மோர்த்தி மற்றும் மருமகள் அபர்ணா கிருஷ்ணனுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இது, அவர்களுக்கு 3வது பேரக்குழந்தையாக அமைந்தது. இந்தக் குழந்தைக்கு ஏகாக்ரா ரோகன் மூர்த்தி எனப் பெயரிடப்பட்டு உள்ளது. ஏகாக்ராவின் பெயர் மகாபாரதத்தில் அர்ஜுனின் கதாபாத்திரத்தைக் குறிக்கும் பெயர் என்று கூறப்படுகிறது.

சமஸ்கிருத வார்த்தையான 'ஏகாக்ரா' என்றால் அசைக்க முடியாத கவனம் மற்றும் உறுதிப்பாடு என்று பொருள். இந்த நிலையில், அந்த 4 மாத பேரக்குழந்தைக்கு தாத்தாவான நாராயண மூர்த்தி ரூ.240 கோடி மதிப்பிலான இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகளைப் பரிசாக அளித்துள்ளார். இதனால், நாராயண மூர்த்தியின் 0.40 சதவீத பங்குகளில் 0.04 பங்குகள் பேரனுக்குச் சென்றுள்ளன. இதன்மூலம் இந்தியாவின் இளம் வயது கோடீஸ்வரர் ஆக ’ஏகாக்ரா ரோகன் மூர்த்தி’ மாறியுள்ளார்.

இதையடுத்து, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில், நாராயண மூர்த்தியின் பங்கு 0.36 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. அதேநேரத்தில் பேரக்குழந்தை ஏகாக்ராவிடம் 15 லட்சம் பங்குகள் உள்ளன. இதனால், நாராயணன் மூர்த்தியின் குடும்பத்தில் மிக இளம் வயதில் கோடீசுவரரான நபராக அவருடைய பேரன் உள்ளார். ஏற்கெனவே நாராயணன் மூர்த்தி மற்றும் சுதா தம்பதிக்கு 2 பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர்களுடைய மகளான அக்சதா மூர்த்தி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதையும் படிக்க: ’ரஷ்யாவைத் தாக்கினால்..’ அமெரிக்கா, NATO-க்கு எதிராக களத்தில் குதித்த சீனா.. திடீர் ஆதரவு ஏன்?