model image
model image twitter
இந்தியா

புதிய உச்சம் தொட்டது இந்திய குடும்பங்களின் கடன் மதிப்பு.. குறைந்தது சேமிப்பு.. ஆய்வில் தகவல்!

Prakash J

இந்திய குடும்பங்களின் கடன் மதிப்புகள் கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40% என்ற அளவுக்கு உயர்ந்திருப்பதாகவும், அதேசமயம், குடும்பங்களின் சேமிப்புகள் குறைந்திருப்பதாகவும் என இந்திய நிதி நிறுவனமான மோதிலால் ஒஸ்வால் (Motilal Oswal) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த அறிக்கையில், ”கடந்த நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், அதாவது மார்ச் 2023 முதல் டிசம்பர் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்தியக் குடும்பங்களின் மொத்த நிதி சேமிப்பு (gross financial savings) 2022-23ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 10.5 சதவீதத்திலிருந்து 10.8 சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில், இந்தியக் குடும்பங்களின் மொத்த கடன்களும் 5.5 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், 2022-23ஆம் ஆண்டில் இந்திய குடும்பங்களின் மொத்த கடன் வாங்குதல் (annual borrowings) அளவீடு, உள்நாட்டு உற்பத்தியில் 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது சுதந்திர இந்தியாவில் இரண்டாவது அதிகப்படியான உயர்வாகும். 2022-23ஆம் ஆண்டில் இந்திய குடும்பங்களின் கைவச சேமிப்பு பத்தாண்டுகளின் உச்சத்தை எட்டியபோதிலும், அவற்றின் மொத்த சேமிப்பு ஜிடிபி-யில் 18.4 சதவீதமாக ஆறு ஆண்டுகளின் சரிவைச் சந்தித்துள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு சேமிப்பு (GDS) 2013-14 மற்றும் 2018-19க்கு இடைப்பட்ட காலத்தில் பதிவான 31-32 சதவீத வரம்பைவிட 30.2 சதவீதம் என்ற குறைவான அளவீடாக உள்ளது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிக்க: மேற்கு வங்கம்: பரப்புரையில் மாணவிக்கு முத்தம் கொடுத்த பாஜக எம்பி.. வெடித்த சர்ச்சை!

வங்கிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்துதான் இந்த ஆய்வை நடத்தி அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் மோதிலால் ஒஸ்வால், “இந்தியக் குடும்பங்களின் வருமானம் தொடர்ந்து பலவீனமாக இருப்பதுடன், இதனால் ஜிடிபியில் சேமிப்பின் அளவு 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும், இந்திய குடும்பங்களின் சேமிப்பு குறைவானது வியப்புக்குரியதாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.

இந்திய குடும்பங்களின் சேமிப்பு குறைவானதற்கு கடுமையான விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை போன்றவையே முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக எரிபொருள், தங்கம் உள்ளிட்டவற்றின் பொருட்கள் கடுமையான விலை உயர்வைக் கண்டு வருவதால் குடும்பங்களில் சேமிப்பு அளவு குறைந்து வருகிறது. மேலும், பொருட்களின் விலை உயரும் அளவுக்கு மக்களின் வருமானம் உயராததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதனால் இந்திய குடும்பங்கள் சேமிக்கும் அளவைக் குறைத்துவிட்டு, அத்தியாவசிய செலவுக்கான தொகையை அதிகப்படுத்திவிட்டனர். இதனால்தான் இந்தியர்களின் பாரம்பரிய பழக்கமான சேமிப்புத் திறன் குறைந்து கடன் வாங்கும் நிலை அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: ”பாஜகவில் போட்டியிடும் என் மகன் தோற்கவேண்டும்; காங். வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்” - ஏ.கே.அந்தோணி