பிரதமர் மோடி கோப்புப்படம்
இந்தியா

பிரதமர் மோடி மீது நம்பிக்கை இழக்கும் இந்தியர்கள்... பாஜகவிற்கு அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு!

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், சமீபத்திய ஆய்வின் முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

2025 -2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை பட்ஜெட்டில் தாக்கல் செய்யும்போது என்ன பேசப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே வலுத்துள்ளது. இந்தநிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்வகையில், சமீபத்திய ஆய்வின் முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.

தேர்தல் ஏஜென்சி நிறுவனமான சி - வோட்டர் நடத்திய சமீபத்திய ஆய்வுதான் தற்போது பேசிபொருளாக மாறியுள்ளது. இந்த ஆய்வு, இந்தியா முழுவதும் உள்ள 5,269 பெரியவர்களிடம் நடத்தப்பட்டது. இதன் முடிவு, பிரதமர் மோடி மீது இந்தியர்கள் நம்பிக்கை இழந்து வருவதை சுட்டிக்காட்டி உள்ளது.

பிரதமர் மோடி

தேங்கி நிற்கும் ஊதியங்கள், உயர் வாழ்க்கை செலவுகள் போன்றவை எதிர்கால வாய்ப்புகளை மழுங்கடிப்பதாக இருப்பதால், இந்தியர்கள் தங்களின் வாழ்க்கையின் தரம் குறித்து நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆய்வில், உலகிலேயே ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டிருக்கும் இந்தியா, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவில் மெதுவான வளர்ச்சியை இம்முறை பதிவு செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கண்களில் நீர் வரவழைக்கக்கூடிய அளவிற்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்லும் உணவுப்பொருட்கள் மீதான பணவீக்கமானது இந்தியக்குடும்ப வரவு செலவு திட்டங்களின் சுமையை அதிகரித்து, அவர்களின் செலவழிக்கும் சக்தியைக் குறைத்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

மோடி

கருத்துக்கணிப்புக்கு பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர் பணவீக்கம் கட்டுப்பாடில்லாமல் இருப்பதாகவும், மோடி 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றப்பிறகே விலைகள் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிலர், பணவீக்கம் தங்களது வாழ்க்கையை மிகவும் பாதித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இந்தியா உலகளவில் பொருளதார வளர்ச்சியை அடைந்தாலும், இந்தியாவின் வேலைச் சந்தையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும், ஊதியமும் போதுமான அளவு கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரியவந்துள்ளன.

பட்ஜெட்டுக்கு முந்தைய கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 37 சதவீதத்திற்கும் அதிகமானோர், அடுத்த ஆண்டில் சாதாரண மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரம் மோசமடையும் என கணித்துள்ளனர். இது 2013-க்குப் பிறகு மிக உயர்ந்த சதவீதமாகும் என தேர்தல் ஏஜென்சி நிறுவனமான சி-வோட்டர் தெரிவித்துள்ளது.