நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதிகள் மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச தொகுதி மறுவரையறை மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் நேற்று ஆளும் பாஜக அரசு தாக்கல் செய்தது. தொகுதி மறுவரை மசோதாவின்படி, தற்போதுள்ள 543 மக்களவை இடங்களை 50% அதிகரித்து, மொத்தம் 816 இடங்களாக மாற்ற அரசு திட்டமிட்டது. இதில், 33% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 273 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்படும்.
ஆனால், இந்த தொகுதி மறுவரையறை என்பது 2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்த நிலையில், மத்தியரசின் மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற கொள்கையின் படி, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்மாநிலங்கள் இந்த தொகுதி மறுவரையறையில் பாதிக்கப்படும் எனவும் வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தென்னிந்திய மாநிலங்களின் "அரசியல் செல்வாக்கு" குறைய வாய்ப்புள்ளது எனவும் கூறி தென்மாநில முதல்வர்கள் (சந்திரபாபு நாயுடு தவிர) இந்த மசோதாவுக்கு எதிராக குரல் எழுப்பினர்.
இந்த சூழலில் தான், நேற்றைய முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது 2 நாட்களாக விவாதம் நடைபெற்றுவந்த நிலையில், நேற்று தொகுதி மறுவரையறை செய்வதற்கு, 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெற்றது. இந்த மசோதா வெற்றிபெற 3ல் 2 பங்கு அதாவது 352 எம்.பி-களின் ஆதரவு தேவை. இந்த நிலையில் தான், நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 528 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
அதில், 298 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 230 உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராகவும் வாக்களித்தனர். இதனால், மசோதா நிறைவேறுவதற்கான பெரும்பான்மை எண்ணிக்கை கிடைக்கப்படவில்லை. இந்த சூழலில், கடந்த சில வாரங்களாக இந்திய அளவில் பேசுபொருளாகியிருந்த தொகுதி வரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்திருக்கிறது. இது ஆளும் பாஜக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று இன்று நாட்டு மக்களுக்காக உரையாற்றியுள்ள பிரதமர் மோடி, ”மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்த்தது எப்படி என்பதை நாடே பார்த்தது. மக்கள் அதிகாரத்திற்கு வரும் கனவை எதிர்க்கட்சிகள் தடுத்துள்ளன. மசோதா நிறைவேற்றப்படாததற்கு நாட்டுப் பெண்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். காங்கிரஸ், திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவை தடுத்தி நிறுத்தின.
திமுக - காங்கிரசின் சுயநல அரசியலால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மசோதா தோல்வியடைந்த பிறகு அந்தக் கட்சிகள் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டிருக்கின்றன. தாங்கள் அவமதிக்கப்பட்டதை நாட்டுப் பெண்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். மகளிர் உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக நான் இதைப் பார்க்கிறேன். பெண்களின் கோபத்திடம் இருந்து எதிர்க்கட்சிகள் தப்ப முடியாது. பெண்கள் தற்போது திருப்பியடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. பாஜகவின் நேர்மையான முயற்சியை காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் கொலை செய்துவிட்டன” எனத் தெரிவித்துள்ளார்.