உத்திரபிரதேசம் மீரட்டில் சகோதரனை தாக்கவந்த கும்பல் தவறுதலாக 8 வயது சிறுமியை சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மீரட்டிற்கு அருகில் உள்ள சர்தானா பகுதி கலிந்தி கிராமத்தை சேர்ந்தவர் தஹ்சீன். இவர் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்துள்ளனர். இவரது மகன் சாஹில் பால் வியாபாரத்தில் தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாஹில் பால் வியாபாரத்திற்காக அருகில் இருக்கும் சந்தைக்கு சென்றுள்ளார். அப்பொழுது சந்தையில், மஷ்ருஃப், கைஃப், சொஜ்ராப் மற்றும் கம்ரான் என்ற 4 பேருடன் சாஹில் தகறாரில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்பொழுது தொடங்கப்பட்ட இவர்களுக்குள்ளான பிரச்னையானது தொடர்ந்து வந்ததாக தெரியவந்துள்ளது.
கடந்த ஞாயிறு, அதாவது சம்பவம் நடந்த அன்று, சாஹிலுடன் தகராறில் ஈடுபட்ட நால்வரும் மற்றும் மேலும் சிலர் என மொத்தம் ஒன்பது பேர் அடங்கிய கும்பல் ஒன்று சாஹிலைத் தாக்க துப்பாக்கியுடன் அவரின் வீட்டிற்கு வந்துள்ளது.
அந்த கும்பலிடமிருந்து தனது மகன் சாஹிலை காப்பாற்றுவதற்காக தஹ்சீன் அவரைக் கூட்டிக்கொண்டு மாடிக்கு சென்றுள்ளார். அவரைத் தொடர்ந்து அவரது 8 வயது தங்கையான ஆஃபியாவும் அவர்களைத் தொடர்ந்து சென்றுள்ளார்.
அச்சமயம் ஒன்பது பேர் அடங்கிய கும்பல் தங்களது கைத்துப்பாக்கியால் சாஹிலை நோக்கி சுட்டுள்ளனர். ஆனால் தவறுதலாக ஆஃபியா மீது குண்டு பாய்ந்துள்ளது. இதைக்கண்ட அக்கும்பல் உடனடியாக அவ்விடத்தை விட்டு தப்பித்துள்ளனர்.
குண்டடிப்பட்ட தனது மகள் ஆஃபியாவை மீட்ட தஹ்சீன் அருகில் இருக்கும் சுகாதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஆஃபியா ஏற்கனவே இறந்ததாக தெரியவந்தது. இதை அடுத்து தப்பி ஓடிய குற்றவாளிகளை போலிசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.