தீ விபத்தில் பாதிக்கபட்டவர்
தீ விபத்தில் பாதிக்கபட்டவர் புதிய தலைமுறை
இந்தியா

சார்ஜர் போட்டு மறந்து தூங்கியதால் வெடித்த செல்போன்; ஒரே நேரத்தில் 4 குழந்தைகள் தீயில் கருகி பலி!

Jayashree A

மீரட்டில் சார்ஜ் செய்யும் போது செல்போன் பயங்கரமாக வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உடல் கருகி பலியாகினர், பெற்றோர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டின் மோடிபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜானி. இவருக்கு மனைவியும் நான்கு குழந்தைகளும் இருந்துள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று இரவு குழந்தைகள் தங்களது அறையில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த போது செல்போனில் சார்ஜ் குறைய ஆரம்பித்துள்ளது. அருகில் போனை சார்ஜில் போட்டுவிட்டு தூங்க சென்றுள்ளனர்.

நள்ளிரவில், செல்போன் சார்ஜரில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக செல்போன் வெடித்து அருகில் இருந்த பொருட்களில் தீயானது மளமளவென பரவியுள்ளது. இதில் குழந்தைகள் அனைவரும் அத்தீயில் சிக்கிக் கொண்டனர். இருப்பினும் பெற்றோர்கள் குழந்தைகளை காப்பாற்ற முயன்றபோது அவர்களும் தீயில் மாட்டிக்கொண்டுள்ளனர்.

உடனடியாக அருகில் உள்ளவர்கள் தீயை அணைத்து அவர்களை காப்பாற்றியுள்ளனர். பின்னர், அருகில் உள்ள LLRM மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் குழந்தைகள் ஐந்து வயதான கல்லு, ஆறு வயதான கோலு, எட்டு வயதான நிஹாரிகா மற்றும் 12 வயதான சரிகா ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.

பெற்றோர்களான ஜானியும், பபிதாவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சார்ஜ் போட்டுக்கொண்டு செல்போன் உபயோகப்படுத்த கூடாது என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டாலும் மோதுமான விழிப்புணர்வு, குழந்தைகளிடமும் பெற்றோர்களிடமும் இல்லாதிருப்பதே இத்தகைய சம்பவத்திற்கு காரணம்.

இரவு நேரங்களில் செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு பலரும் தூங்கிவிடுகிறார்கள். முழுவதும் சார்ஜ் ஆன பிறகும் சுவிட்ச் ஆஃப் செய்யப்படாமல் இருப்பதால் பேட்டரி சூடேறி வெடித்துவிடுகிறது. இதனால், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது நான்கு குழந்தைகளின் உயிரே பலியாகிவிட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க சார்ஜர் போட்டால் அது முழுவதுமாக ஏறியவுடன் கழட்டிவிட வேண்டும்.