உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. தற்போது அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் 2027ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், ஆளும் பாஜக மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி இடையே கடுமையான போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த தேர்தலில் 1 இடங்களில் மட்டுமே வென்ற மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் இத்தேர்தலில் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப திட்டமிட்டு வருகிறது. இந்தச்சூழலில் தான், தனது சகோதரர் ஆனந்த் குமாரின் மகன்களான ஆகாஷ் ஆனந்த் மற்றும் இஷான் ஆனந்த் ஆகிய இருவருக்கும் கட்சியில் இனி எந்த அரசியல் பதவியும் வழங்கப்படாது மாயாவதி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில், கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை, கட்சிப் பொறுப்புகளில் இருந்து மாயாவதி விடுவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாகவே, தற்போது இருவருக்கும் எதிர்காலத்தில் பி.எஸ்.பி-யில் எந்தப் பதவியும் வழங்கப்படாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம், தனது குடும்ப உறுப்பினர்களை அரசியல் பதவிகளில் இருந்து விலக்கி வைத்திருந்ததைப் போலவே, தானும் குடும்ப அரசியலையும் வாரிசு அரசியலையும் அனுமதிக்க விரும்பவில்லை என மாயாவதி கூறியுள்ளார்.
அதேசமயம், தனது சகோதரர் ஆனந்த் குமார் நீண்ட காலமாக தன்னுடன் இருந்து கட்சிப் பணிகளில் உதவி செய்து வருவதாகவும், அவருக்கு எதிர்காலத்தில் உதவி தேவைப்பட்டால், தற்போது சட்டப்படிப்பு படித்து வரும் அவரது மகள் தீபிகா ஆனந்தின் உதவியைப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், குடும்ப உறுப்பினர்கள் கட்சிப் பதவிகளைப் பயன்படுத்திக் கொள்வது பகுஜன் சமாஜ் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், "இது எனது இறுதி முடிவும் உறுதிமொழியும் ஆகும்" எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம், ஆகாஷ் ஆனந்த் மற்றும் இஷான் ஆனந்தின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு மாயாவதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமாரின் மகனான ஆகாஷ் ஆனந்த் சமாஜ்வாதி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். இவரை கடந்த 2023-ல் தனது அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்திருந்தார். ஆனால் 2024-ல் அவரது அரசியல் செயல்பாடுகள் தொடர்பாக அவரை வாரிசுப் பொறுப்பிலிருந்து நீக்கினார். இதற்கிடையில், பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பியும், ஆகாஷ் ஆனந்தின் மாமனாருமான அசோக் சித்தார்த்துக்கும், மாயாவதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கட்சியில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இதையடுத்து, மாயாவதி மற்றும் ஆகாஷ் ஆனந்த் இடையே மோதல் தொடங்கிய நிலையில் கடந்த வியாழக்கிழமை ஆகாஷ் ஆனந்தை கட்சியில் இருந்து நீக்கியிருந்தார். தற்போது, எதிர்காலத்திலும் கட்சி பொறுப்பு வழங்கப்படாது என்பதை மாயாவதி தெளிவுபடுத்தியுள்ளார்.