இந்தியா

பெங்களூரு: ஓடிக்கொண்டிருந்த ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்று கீழே விழுந்து இறந்த நபர்

நிவேதா ஜெகராஜா

பெங்களூருவில் 19 வயது இளைஞரொருவர், ஓடிக்கொண்டிருந்த ரயிலில் படிக்கட்டில் நின்றபடி செல்ஃபி எடுக்கையில் எதிரிலிருந்த பாலத்தின் தண்டவாளத்தினால் தடுமாறி கீழே விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவின் ரெஸ்டாரெண்ட் ஒன்றில் வேலை செய்யும் அபிஷேக் என்ற இளைஞர், கடந்த 7 ம் தேதி மதிய நேரத்தில் தனது 4 நண்பர்களுடன் சொந்த கிரமாத்துக்கு ரயிலில் சென்றிருந்திருக்கிறார். ஊர்த் திருவிழாவுக்காக தனது நண்பர்களுடன் பயணம் செய்த அவர், தங்களுடன் பயணிக்கையில் எழுந்து எங்கோ சென்றதாகவும், பின் அவரை காணவில்லை என்றும் அந்த 4 நண்பர்களும் ஊர் திரும்பியவுடன் அபிஷேக்கின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அபிஷேக்கின் பெற்றோர் தங்களின் மகனை காணவில்லை எனக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் ரயிலிருந்து தங்களின் தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர். அதன் பின்னணியில்தான் அபிஷேக் படியில் நின்றபடி பயணம் செய்ததும், அப்போது அவர் செல்ஃபி எடுக்க முயன்று, தடுமாறி கீழே கால்வாய் ஒன்றில் விழுந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவரின் உடலை தேடிக்கண்டறிந்து காவல்துறையினர் மீட்டிருக்கின்றனர்.