மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி X
இந்தியா

ரத்தக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மம்தா பானர்ஜி!

Rishan Vengai

2024 மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தங்களுடைய 42 தொகுதி போட்டியாளர்களின் பெயரையும் திரிணாமுல் காங்கிரஸ் சமீபத்தில் வெளியிட்டது. கடந்த மார்ச் 10ம் தேதியன்று கொல்கத்தாவின் பிரிகேட் மைதானத்தில் ஜோனோகோர்ஜோன் சபா என்ற பிரச்சார கூட்டத்தின் நிகழ்வில், 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடும் 42 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் தொகுதியின் விவரங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்தது. அதில் பங்கேற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பஹரம்பூரில் போட்டியிடுவார் என்ற தகவலையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

தேர்தலையொட்டி பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, திடீரென முகத்தில் ரத்தகாயத்துடன் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனை அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவிட்டிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ், பிரார்த்தனை செய்யுமாறு பதிவிட்டுள்ளது.

ரத்தக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மம்தா!

திரிணாமுல் காங்கிரஸ் பதிவிட்டிருக்கும் அந்த புகைப்படத்தில், மம்தா பானர்ஜியின் நெற்றியின் நடுவில் ஆழமான வெட்டு மற்றும் முகத்தில் இரத்தத்துடன், மருத்துவமனை படுக்கையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. ஆனால் மேற்கு வங்க அரசு மற்றும் கட்சி தலைமை, கூடுதல் விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.

இதுகுறித்து அவர்கள் பதிவிட்டிருக்கும் பதிவில், “எங்கள் தலைவர் மம்தா பானர்ஜிக்கு பெரும் காயம் ஏற்பட்டது. தயவுசெய்து அவரை உங்கள் பிரார்த்தனை மூலம் நல்லநிலையில் வைத்துக் கொள்ளுங்கள்" என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி X இல் பதிவிட்டுள்ளது.