தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நான்காவது முறையாக ஆட்சியைத் தொடர முயற்சிக்க, பாஜக ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக செயல்படுகிறது. மம்தா பானர்ஜி, 90 லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கியதாக பாஜக மீது குற்றம் சாட்டி, உச்ச நீதிமன்றத்தை அணுகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது .
தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 23ஆம் தேதியும், மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது.
மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் வரும் தேர்தலில் வென்று நான்காவது முறையாக ஆட்சி அமைக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை பிடிக்க பாஜகவும் தீவிரமாக இருந்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக 90 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து பாரதிய ஜனதா கட்சி நீக்கியுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய மம்தா பானர்ஜி, நீக்கப்பட்டவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க உச்ச நீதிமன்றத்தை தங்கள் கட்சி அணுகும் என்றும் தெரிவித்தார்.
90 லட்சம் பேர் நீக்கப்பட்டாலும் தேர்தலில் தங்கள் கட்சியே வெற்றிவாகை சூடும் என்றும் மம்தா தெரிவித்தார். பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள வங்கமொழி மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.
மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், வங்காளத்தின் இருப்பிற்காகவும் நடக்கும் ஒரு போராட்டம் என்றும், வங்காள மக்களின் உரிமைகளையும் அடையாளத்தையும் பாதுகாப்பதற்காக, வாக்காளர்கள் விழிப்புடன் இருந்து தேர்தலில் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார் .