உத்தவ் தாக்கரே PT
இந்தியா

மீண்டும் உடையும் உத்தவ் கட்சி? ஆப்சென்ட் ஆன 5 எம்பிக்கள்.. மகாராஷ்டிராவில் அரசியல் புயல்!

ஒருகாலத்தில் ஒற்றுமையாக இருந்த சிவசேனா, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு பிரிவைக் கண்டது.

Prakash J

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே கூட்டிய ஒற்றுமைக் கூட்டத்தை, அவருடைய 9 எம்பிக்களில் 5 எம்பிக்கள் புறக்கணித்திருப்பது கட்சிக்குள் விவாதப் பொருளை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இருதரப்பும் இதுகுறித்து தங்களது பதில்களைத் தெரிவித்துள்ளன.

மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டு வகையாகப் பிளவுபட்டுள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிராவிலும் இதேபோன்று ஒரு சூழல் உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருகாலத்தில் ஒற்றுமையாக இருந்த சிவசேனா, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு பிரிவைக் கண்டது.

உத்தவ் தாக்கரே

தற்போது அதுதான் உண்மையான சிவசேனாவாக அறியப்படுகிறது. அதேநேரத்தில், உத்தவ் தாக்கரே கட்சி, UBT என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், உத்தவ் தாக்கரே தனது மாதோஸ்ரீஇல்லத்தில் முக்கியமான ஒற்றுமைக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். இதில் அவருடைய 9 எம்பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இதில் சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தேஷ்முக், ஓம்ராஜே நிம்பல்கர், பாவுசாஹேப் வக்சௌரே மற்றும் நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர் ஆகிய 5 எம்பிக்கள் கலந்துகொள்ளவில்லை.

இதனால், அவர்கள் சிவசேனாவில் ஐக்கியமாகலாம் எனத் தகவல் பரவியது. ஆனால், அவர்கள் காணொளி வாயிலாக அமர்வில் கலந்துகொண்டதாக யுபிடி தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் மாதோஸ்ரீயில் கட்டாய நேரடி சந்திப்பிற்கு வருமாறு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார். எனினும், இவ்விவகாரம் மகாராஷ்டிராவில் அரசியல் புயலை ஏற்படுத்தியுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே

உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த ஒருசில எம்பிக்கள் தொடர்ச்சியாக துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா நிர்வாகிகளை சந்திப்பது, மத்திய அமைச்சர்களைச் சந்திப்பது, அதுதொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்ததே இதற்கு முக்கியக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. எனினும், அந்தச் சந்திப்பு முற்றிலும் அரசியல் சார்பற்றது என உத்தவ் தாக்கரே எம்பிக்கள் விளக்கமளித்துள்ளனர். எனினும், அவர்கள் கட்சி தாவுவார்களா அல்லது அக்கட்சியிலேயே இருப்பார்களா என்பது அடுத்து வரும் நாட்களில் தெரிந்துவிடும்.