Bank Minimum Balance Chat gpt
இந்தியா

’Minimum Balance’ இல்லை.. வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.19,000 கோடி அபராதம் பெற்ற வங்கிகள்!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் கடந்த 3 நிதியாண்டுகளில் மட்டும், குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத பொதுமக்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து 19 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Premkumar S

இந்திய வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாததால் ரூ.19,000 கோடி அபராதம் வசூலித்துள்ளன. இது கிராமப்புற மற்றும் நகர்புற வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, வங்கிகள் கடுமையாக நடந்து கொள்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் வங்கிகள், தங்களது வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க வேண்டும் எனக் கூறுகின்றன. அவ்வாறு, வாடிக்கையாளர்கள் கடைபிடிக்காத பட்சத்தில், அந்த வங்கி கணக்குகளுக்கு குறிப்பிட்ட அளவில் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகை, வங்கிகளுக்கு வங்கிகளுக்கு மாறும். அதேபோல, கிராமப்புறங்களுக்கும், நகர்புறங்களுக்கும் என சிறு வித்தியாசம் இருக்கும்.

இந்தசூழலில் தான், இந்த அபராதத் தொகையின் காரணமாக, ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், தொழிலதிபர்கள் வங்கிகள் கடன் வாங்கி கட்டமுடியாத பட்சத்தில் தள்ளுபடி செய்யும் வங்கிகள், சாதரண பொதுமக்களிடம் கடுமையான முறையில் நடந்து கொள்வதாகவும் விமர்சனம் இருந்து வருகிறது.

model image

இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. அதில், 2022 - 2023 ஆம் நிதியாண்டு முதல் 2024 - 2025 வரையிலான நிதியாண்டுகளில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காமல் வங்கி கணக்கு வைத்திருந்தவர்களிடம் இருந்து சுமார், 19 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் வசூலித்திருப்பதாக நிதியமைச்சம் தெரிவித்துள்ளது.

நிதியமைச்சகத்தின் தரவுகளின் படி, தனியார் துறை வங்கிகள் 11 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் வசூலித்திருக்கும் நிலையில், பொதுத்துறை வங்கிகள் 8 ஆயிரத்து 93 கோடி ரூபாய் அபராதம் வசூலித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

மேலும், தனியார் துறை வங்களில் அதிகபட்சமாக, ஹெச்.டி.எஃப்.சி வங்கி 3,872 கோடி அபராதம் வசூலித்திருக்கிறது. பொதுத் துறை வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி 1,578 கோடி ரூபாய் அபராதம் விதித்து முதலிடத்தில் இருக்கிறது.

bank

அதேசமயம், நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 2020 மார்ச்-ல், வங்கி கணக்குக்கான குறைந்தபட்ச இருப்பை நீக்கியிருந்தது. இதையடுத்து, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் தங்கள் குறைந்தபட்ச இருப்பு என்ற விதிமுறையை நீக்கிவருகின்றன. இதன் மூலம் ஜீரோ வைப்புத் தொகையுடன் கூட எவ்வித அபராதமும் இல்லாம் கணக்கை வைத்துக் கொள்ள முடியும். ஆனால், தனியார் வங்கிகளில் இது தொடர்ந்து நடைமுறையிலேயே இருக்கிறது.

இதற்கிடையில், பொதுமக்களிடம் இருந்து 19 ஆயிரம் கோடி ரூபாயை அபராதமாக விதித்திருப்பது குறித்து பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.