ஃபர்மான் கான், மோனலிசா போஸ்லே PTI
இந்தியா

கும்பமேளா மோனலிசா | வெளிவந்த உண்மையான வயது.. கணவர் மீது பாய்ந்த போக்சோ.. பின்னணியில் லவ் ஜிகாத்?

ஒரு போலியான பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி, இந்த திருமணம் நடைபெற்றுள்ளதாக விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது.

Prakash J

மோனலிசா ஒரு சிறுமி என்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் காவல்துறை அவரது கணவர் ஃபர்மான் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் அழகான மயக்கும் கண்கள், ஈர்க்கும் சிரிப்பு, நம்பிக்கையான பேச்சு, எளிமையான தோற்றம் என பாசிமணி விற்கும் இளம்பெண் மோனலிசா போஸ்லே ஒரேநாளில் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலானார். தவிர, அவர் பற்றிய செய்திகளும் அனைத்து சமூக ஊடகங்களிலும் வைரலாகின. அவர் இதன்மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். ஒருகட்டத்தில், அவரைப் பார்த்த பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, மோனாலிசாவை தனது அடுத்த படத்தில் நடிக்க வைப்பதாக அறிவித்தார். ’டைரீஸ் ஆஃப் மணிப்பூர்’ என்ற அந்த படத்திற்காக மோனலிசாவுக்கு ரூ.21 லட்சம் சம்பளமும் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஃபர்மான் கான், மோனலிசா போஸ்லே

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் முகநூல் மூலம் பழக்கமான ஃபர்மான் கானும் மோனலிசாவும் காதலிக்கத் தொடங்கினர். இந்தக் காதல் விவகாரம் மோனலிசாவின் பெற்றோருக்குத் தெரிய வர, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் வேறுவேறு மதத்தைச் சேர்ந்ததால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, இந்த காதல் ஜோடி, கேரளாவுக்குத் தஞ்சமடைந்து கோயில் ஒன்றில் கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், பாதுகாப்பு கேட்டு கேரள போலீஸில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், மோனலிசாவை தன் தந்தையுடன் அனுப்பிவைக்க முயற்சி செயதனர். இதற்கிடையே அவர்களுடைய திருமணத்தை பலரும் 'லவ் ஜிகாத்' என்று விமர்சித்தனர். ஆனால், அந்த தம்பதி இருவரும் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் விளக்கமும் அளித்தனர். அதேநேரத்தில், மோனலிசாவின் வயது குறித்த பிரச்னையும் பூதாகரமாக வெடித்தது.

இந்த நிலையில், மோனலிசா ஒரு சிறுமி என்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் காவல்துறை அவரது கணவர் ஃபர்மான் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின்கீழ் குற்றச் சதி மற்றும் சட்டவிரோதத் திருமணம் தொடர்பான பிரிவுகளின் கீழும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு போலியான பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி, இந்த திருமணம் நடைபெற்றுள்ளதாக விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது. மகேஷ்வர் நகராட்சியால் வழங்கப்பட்ட அந்தச் சான்றிதழில், மோனாலிசாவின் பிறந்த தேதி ஜனவரி 1, 2008 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, அரசு மருத்துவமனை பதிவேடுகளில் உள்ள தேதியைவிட கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் முந்தையதாகும்.

மோனலிசா போஸ்லே

அதிகாரப்பூர்வ மருத்துவமனைப் பதிவுகளின் அடிப்படையில், மோனலிசா 2009 டிசம்பர் 30 அன்று பிறந்தார் என்றும், அதன்படி அவருக்கு திருமணம் நடைபெற்ற மார்ச் 11ஆம் தேதி அவருக்கு 16 வயது, 2 மாதம், 12 நாட்கள் ஆகியிருந்தது என்றும் பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் தீர்மானித்துள்ளது. மேலும், பழைய போலிச் சான்றிதழை ரத்து செய்யுமாறு ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த திருமணத்தில், அரசியல்வாதிகள் மற்றும் அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதையும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. தவிர, கேரளா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் காவல்துறை தலைமை இயக்குநர்களையும் ஏப்ரல் 22 அன்று புதுடெல்லியில் உள்ள தனது தலைமையகத்திற்கு வருமாறு பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.