கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவரின் மகள் அபயாவின் தாயார் ரத்னா தேவநாத் பாஜக சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாஜக 206 இடங்களைக் கைப்பற்றி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இதன்மூலம் 15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸின் மம்தா ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவரின் மகள் அபயாவின் தாயார் ரத்னா தேவநாத் பாஜக சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு (2024, ஆகஸ்ட் 9), கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமூல் காங்கிரஸுக்கும் (TMC) பாஜகவுக்கும் இடையே இந்த வழக்கு ஒரு பதற்றமான சூழலை உருவாக்கியது. குற்றவாளிகளை மாநில அரசு பாதுகாப்பதாகவும், விசாரணையைத் தடுப்பதாகவும் பாஜக குற்றம்சாட்டியது.
அதேநேரத்தில், இந்த வழக்கில் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டு அவனுக்கு உடனடியாக ஆயுள் தண்டனை பெற்றுத்தரப்பட்டபோதிலும் இந்த சம்பவம் மம்தா ஆட்சியில் கரும்புள்ளியாக மாறியது. ஆனால், பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகளை திரிணாமூல் கட்சி வன்மையாக மறுத்ததோடு, உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் கூறியது. இந்தச் சூழலில்தான் திரிணாமுல் காங்கிரஸின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட பானிஹட்டி தொகுதியில், ஆர்.ஜி.கர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரை வேட்பாளராக அறிவித்தது.
பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட ரத்னா தேவநாத் 87,977 வாக்குகள் பெற்று எதிர்த்து போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தீர்த்தங்கர் கோஷை 28,836 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த 20 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸின் நிர்மல் கோஷ் வசமிருந்த இந்தத் தொகுதி, தற்போது ரத்னா தேவநாத்தின் வெற்றியின் மூலம் பாஜக வசம் வந்துள்ளது. தனது மகளுக்கு நேர்ந்த கொடூரத்திற்கு நீதி கேட்டுப் போராடிய ரத்னா தேவநாத்தும் தற்போது கவனம் பெற்றுள்ளார்.