நீட் முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி நாடு முழுவதிலும் பல்வேறு நகரங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ச்சியான போரட்டத்தில் ஈடுபட்டது. இதன் ஒருபகுதியாக, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். எனினும், அவரது போரட்டம் 20 நாட்களைக் கடந்த நிலையில், கடந்த ஜூலை 18-ம் தேதி அவரை போராட்டக்களத்தில் இருந்து அகற்றி மருத்துவமனையில் சேர்த்தது காவல்துறை.
இதற்கிடையில், ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது. இதனையடுத்து, டெல்லியில் போராடி வந்த CJP நாடாளுமன்றம் நோக்கி பேரணி அறிவித்தது. தொடர்ந்து, இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இருந்து போராட்டக்களத்திற்கு வந்தவர்கள் பேரணியில் ஈடுபட முயன்றனர். இதனைத் தடுக்கும் நோக்கில், காவல்துறை கடுமையான தடியடித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இது தொடர்பாக வெளியாகி வரும் வீடியோக்கள் இந்தியாவை பெரும் பதற்ற நிலைக்கு கொண்டுவந்திருக்கின்றன. மேலும், பெல்லட் குண்டுகள், புகைகுண்டுகளை வீசி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது டெல்லியில் போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கிறது.
எனினும், மத்திய அரசு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இதனால், டெல்லி போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போது டெல்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ள கன்னாட் பிளேஸில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, புதுடெல்லி நகராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் அறிவுறுத்தியபடி, கன்னாட் பிளேஸில் உள்ள அலுவலகங்கள் மற்றும் உணவகங்கள் உட்பட அனைத்துக் கடைகளும் நிறுவனங்களும் இன்று மாலை 6.30 மணிக்குள் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என்று புது டெல்லி வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு போராட்டக்காரர்களிடையே பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், "இன்று மாலை 6:30 மணிக்குள் கன்னாட் பிளேஸில் உள்ள அனைத்துக் கடைகளையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது; வரிசையாக ஆம்புலன்ஸ்கள் குவிக்கப்பட்டுள்ளன. மோடி அரசு இன்று மீண்டும் ஜந்தர் மந்தரில் தனது சொந்தக் குழந்தைகள் (மாணவர்கள்) மீது கொடூரமானத் தாக்குதலை நடத்தப் போகிறதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே டெல்லி வர்த்தகத்தின் அறிக்கையை பகிர்ந்து "அரசு என்ன செய்ய நினைக்கிறது" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், கன்னாட் பிளேஸ் பகுதியில் கடைகளை மூடக் கூறி பிறப்பிக்கப்பட்ட அவசர உத்தரவும், அதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் மற்றும் அபிஜித் திப்கேவின் இந்த விமர்சனமும் டெல்லியில் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.