வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது, வக்ஃப் நிலமா, இல்லையா என்பதை மாவட்ட நிா்வாகம் மற்றும் நீதிமன்றங்கள் முடிவு செய்ய அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை சட்டத்தில் மேற்கொள்ளும் வகையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது.
மேலும், மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனையடுத்து அந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக, 31 பேர் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இதில், பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் மக்களவையில் இருந்து 21 பேர், மாநிலங்களவையில் இருந்து 10 பேர் என பாஜக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம் பெற்றனர். தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களும் நடைபெற்றன.
இந்த நிலையில், கடந்த வாரம், வக்ஃப் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்ய தங்களுக்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை எனக் கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், வக்ஃப் வாரிய சட்ட மசோதாவை பரிசீலிக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழு இன்று கூடியது. கூட்டம் கூடியதும், எம்.பி.க்கள் இடையே மோதல் ஏற்பட்டது. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில், மசோதாவை ஏற்றுக்கொள்ளுமாறு அவசரப்படுத்தக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மசோதாவை தாக்கல் செய்ய ஆளுங்கட்சி எம்.பி.க்கள் அவசரப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இதற்கிடையே, வக்ஃப் வாரிய சட்ட வரைவில் 14 மாற்றங்களுடன், நாட்டில் முஸ்லிம் தொண்டு சொத்துக்கள் நிர்வகிக்கப்படும் விதத்தில் வக்ஃப் திருத்த மசோதாவுக்கு கூட்டு நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்தது. 14 மாற்றங்களை ஏற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்கான வாக்கெடுப்பு ஜனவரி 29ஆம் தேதி நடைபெறும் எனவும், இதன் இறுதி அறிக்கை ஜனவரி 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.