குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மருத்துவ காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அதுவும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய முதல் நாளிலேயே அவர் ராஜினாமா செய்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அவருடைய ராஜினாமா அடுத்த துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதையடுத்து, வரவிருக்கும் நாட்களில் அதற்கான பெயர்கள் பாஜக அல்லது அவர்களது கூட்டணியால் பரிசீலிக்கப்படும் எனத் தெரிகிறது. அந்த வகையில், ஒரு மாநிலத்தின் ஆளுநர், அனுபவம் வாய்ந்த நிறுவனத் தலைவர் அல்லது மத்திய அமைச்சர் ஆகியவர்களில் யாராவது ஒருவர் தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் சொல்லப்போனால், மூத்த கட்சித் தலைவரும் ஜனதா தளம் (ஐக்கிய) எம்.பியுமான ஹரிவன்ஷ், இந்தப் பதவிக்கு நிறுத்தப்படலாம் என பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் 2020 முதல் இந்தப் பதவியில் பணியாற்றி வருவதாலும், அரசாங்கத்தின் நம்பிக்கையைப் பெறுவதாலும், அவர் ஒரு சாத்தியமானவராகக் கருதப்படுகிறார் என அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும், இது உறுதியான தகவல் இல்லை என்பதே நிதர்சனம்.
அதேநேரத்தில், இனிவரும் காலங்களில் இதற்கான வேலைகள் வேகம் பிடிக்கும் என்பதே உண்மை. முன்னதாக, பாஜக தலைவராக இருந்த வெங்கய்யா நாயுடு, அதன்பின்பு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். அதற்குப் பிறகு அவர் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வகையில் பார்க்கப்போனால், பாஜவுக்கு இப்படியான தலைவர்கள் நிறையவே இருக்கிறார்கள்.