மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசம் முகநூல்
இந்தியா

45 நாட்களில் 2.5 லட்சம் வருமானம் - குழந்தைகளை கட்டாயப்படுத்தி குடும்பத்தோடு யாசகம் பெற்ற பெண் கைது!

ஜெனிட்டா ரோஸ்லின்

யாசகம் பெற்று 45 நாட்களில் 2.5 லட்சம் சம்பாதிக்கும் பெண்ணின் சம்பவம் மத்திய பிரதேசத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் மற்றும் இந்தூர் பகுதிகளில் அதிகரிகத்து வரும் யாசகம் பெறுவர்களின் நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் கிடைத்த தகவல் கேட்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய பிரதேசம், இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் அம்மாவட்ட நிர்வாகம் களமிறங்கியுள்ளது. இதன்படி, லவ் குஷ் சதுக்கத்தில் அதிகாரிகளிடம் பிடிப்பட்ட யாசகம் பெறும் பெண் ஒருவர் தன் குடும்ப உறவினர்களோடு சேர்ந்து யாசகம் பெறுவதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது குழந்தைகளை இதனை செய்ய சொல்லி கட்டாயப்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மேலும் இது குறித்து அப்பெண் ஒப்புகொள்கையில், “இதன்மூலம் 45 நாட்களில் 2. 5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறோம். கணவன்,மனைவி, குழந்தைகள் 3 பேர் என்று மொத்தம் 5 பேர் கொண்ட குழு நகரின் வெவ்வேறு பகுதிகளில் பிச்சை எடுக்கிறோம்.

எனக்கு மேலும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் ராஜஸ்தானில் தங்களின் தாத்தா பாட்டியுடன் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ரூ.1 லட்சம் அனுப்பி வைக்கப்படும். மீதமுள்ள பணம் வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.50,000 சேமித்து வைத்து விடுவோம். பட்டினி கிடப்பதைவிட நாங்கள் பிச்சை தேர்ந்தெடுத்துள்ளோம். திருடுவதைவிட பிச்சை எடுப்பது சிறந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கைதானபோது ரூ.19, 200 அப்பெண்ணிடம் இருந்துள்ளது. இந்தபணம் கடந்த 7 நாட்களாக அவருக்கு கிடைத்த வருமானம் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களின் உறவினர்கள் சகோதரி, அவரது மைத்துனர் என்று அனைவரும் இதே தொழிலைதான் செய்து வருகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.