இந்திய விமானப்படையின் முதுகெலும்பாகக் கருதப்படும் போர் விமானம் என்றால், அது சுகோய்-30 எம்கேஐ (Sukhoi-30MKI) விமானங்கள்தான். ரஷ்யாவின் சுகோய் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த ரக விமானங்களே, இந்திய விமானப்படையில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
இந்திய விமானப்படையில் மட்டும் 260-க்கும் மேற்பட்ட சுகோய்-30 எம்கேஐ விமானங்கள் உள்ளன. இந்த ரக போர் விமானங்கள் சுமார் 3,000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடியவை. நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதி கொண்ட இந்த விமானம் இந்திய எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அசாம் மாநிலம் ஜோர்ஹாட் (Jorhat) விமானத் தளத்திலிருந்து கிளம்பிய இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 எம்கேஐ விமானம், கர்பி ஆங்லாங் (Karbi Anglong) மாவட்டத்தில் உள்ள இங்லாங் எகோபி மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த மோசமான விபத்தில், விமானத்தில் பயணம் செய்த அனுஜ், பூர்வேஷ் துரக்கர் ஆகிய இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளதாக விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அசாமில் நடந்த சுகோய் விமான விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்குஉத்தரவிடப்பட்டுள்ள நிலையில், விமான விபத்துக்கு காரணமாக தொழில்நுட்பக் கோளாறா அல்லது மோசமான வானிலையா என்பது விரிவான விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது.