India alliance
India alliance pt desk
இந்தியா

"விசாரணை அமைப்புகள் இன்றி மோடியால் வெற்றி பெற முடியாது" - I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் பேச்சு

webteam

செய்தியாளர்: R.ராஜிவ்

ராகுல் காந்தியின் யாத்திரை நிறைவு விழாவும் I.N.D.I.A. கூட்டமையின் பேரணியும் மும்பை சிவாஜி பூங்காவில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், ஃபரூக் அப்துல்லா, சரத் பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். அவர்கள் பேசியதை விரிவாக பார்க்கலாம்...

CM Stalin

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்

இந்த நிகழ்ச்சியில் முதலில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற்றால், மத்தியில் மதச்சார்பற்ற மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை அமைப்போம்.

தேர்தல் பத்திரங்கள், ஆளும் பாஜகவின் வெள்ளை காலர் ஊழல்

கடந்த பத்து ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி சில விஷயங்களை மட்டுமே செய்துள்ளார். அவை வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரம். இதை தடுத்து நிறுத்த வேண்டும். எதிர்க்கட்சிகள் இந்தியா என்று பெயரிட்டதால், பாஜக ‘இந்தியா’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனர்” கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர், எம்பி ராகுல்காந்தி:

“மின்னணு இயந்திரங்கள், மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் வருமான வரித்துறை இல்லாமல் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியால் வெற்றி பெற முடியாது. மோடி ஒரு ‘சக்தி’க்காக வேலை செய்யும் ‘முகமூடி’. அவர் 56 அங்குல மார்பு இல்லாத, ஒரு ஆழமற்ற மனிதர், பிரதமர் மோடிக்கு ஊழல் மீது ஏகபோக ஆர்வம் இருக்கிறது. வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் கோரிக்கை இங்கே ஏற்கப்படவில்லை” என்றார்.

India alliance

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா:

“நாட்டைக் காப்பாற்ற எதிர்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி, மணிப்பூர் முதல் மும்பை - இது நமது இந்தியா. வாக்களிக்கும் அதிகாரம் எங்களிடம் உள்ளது, இந்த நாட்டைக் காப்பாற்றும் பொறுப்பை நாம் ஏற்க வேண்டும். வாக்களித்த பிறகு VVPAT சீட்டைக் கவனமாகப் பார்த்து, உங்கள் வாக்குகள் சரியான கட்சிக்கு சென்றதா என்பதை உறுதி செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ்:

“I.N.D.I.A. கூட்டணியின் போராட்டம் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிரானது அல்ல. மாறாக வெறுப்பு சித்தாந்தத்திற்கு எதிரானது. தேசத்தில் உள்ள பன்முகத்தன்மை மற்றும் சகோதரத்துவத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். மோடி ஒரு தயாரிப்பாளர், மொத்த விற்பனையாளர் மற்றும் பொய்களை விநியோகிப்பவர். எங்களை போன்ற உண்மையுள்ளவர்கள் அவருக்கு பயப்படுவதில்லை. மகாராஷ்டிரா அரசாங்கத்தில் இருப்பவர்கள் ‘விநியோகஸ்தர்கள்’தான். தலைவர்கள் அல்ல. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ உதவியுடன் அரசாங்கங்கள் கவிழ்க்கப்படுகின்றன” என குற்றம்சாட்டினார்.

India alliance

சரத் பவார்:

“மகாத்மா காந்தி ‘வெள்ளையனே வெளியேறு’ என்று மும்பையில் இருந்து அழைப்பு விடுத்தார், I.N.D.I.A. தலைவர்கள் மும்பையில் இருந்து பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற சபதம் செய்ய வேண்டும்” என்றார்.