ரேவந்த் ரெட்டி முகநூல்
இந்தியா

தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட்டால், புரட்சி வெடிக்கும் - பாஜகவிற்கு எச்சரிக்கை விடுத்த ரேவந்த் ரெட்டி!

தென்மாநிலங்களை பலவீனப்படுத்த பாஜக சதி - ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு.

PT WEB

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட்டால், புரட்சி வெடிக்கும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி எச்சரித்துள்ளார்.

ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதி மறுசீரமைப்பு மூலம் பிஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தொகுதிகளை அதிகரித்து, நிரந்தர அதிகாரத்தை பெற பாஜக முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.

தென்மாநிலங்களின் தொகுதி குறையாது என்றே அமித்ஷா கூறுவதாகவும், எத்தனை தொகுதிகள் அதிகரிக்கப்படும் என்று அவர் கூறவில்லை எனவும் குறிப்பிட்டார். தற்போதுள்ள விகிதாச்சாரப்படி தொகுதிகள் அதிகரிக்கப்பட வேண்டுமென்ற ரேவந்த் ரெட்டி, வெற்றிகரமாக மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்கள் தண்டிக்கப்பட்டால், புரட்சி வெடிக்கும் என எச்சரித்தார். தெற்கில் தாங்கள் காலூன்றாததால், தென்மாநிலங்களை அரசியல் மற்றும் நிதி ரீதியாக பலவீனப்படுத்த பாஜக சதி செய்வதாகவும், அதனை தடுக்க வேண்டுமெனவும் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.