அசாம் மாநிலம் ஜோர்ஹாட் விமானப்படைத் தளத்தில், இன்று காலை 11 மணியளவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 (An-32) விமானம் தரையிறங்கும்போது, துரதிர்ஷ்டவசமாக விபத்துக்குள்ளானதில், 5 விமானப்படை வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர். எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் இருந்து உயிர் தப்பிய துணை விமானி ஒருவருக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்தான முதற்கட்ட விசாரணையில், விமானப்படை இறங்குதளத்தில் 6 வீரர்கள் பயணித்த விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே தீப்பிடித்து எரிந்ததாகவும், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி கட்டுப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், விபத்து நேரிட்டதற்கான துல்லியமான காரணம் என்ன, தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்து விரிவாக ஆராய இந்திய விமானப்படை ஏற்கனவே முறையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தசூழலில் தான், இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்களை தனது அதிர்காரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஸ்க்வாட்ரன் லீடர் பிரசாந்த் சிங், பிளைட் லெப்டினன்ட் சுபம் குமார், சார்ஜென்ட் ஜிதேந்திர சர்மா, அக்னிவீர்- வாயு கேமராம் குமாவத், அக்னிவீர் - வாயு டேனிஷ் ஆலம் ஆகிய 5 வீரர்கள் உயிரிழந்திருப்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஜோர்ஹாட்டில் நடந்த இந்த ஏஎன்-32 விபத்தில் 5 வீரர்களை இழந்ததை எண்ணி இந்திய விமானப்படை ஆழமாக வருந்துகிறது எனவும் இவர்கள் அனைவரும் தங்களின் கடமையைச் செய்யும்போது நாட்டின் உயரிய தியாகத்தை செய்துள்ளனர் எனவும் இந்திய விமானப்படை குறிப்பிட்டுள்ளது.