இந்தியா

நான் இன்னமும் மகாராஷ்டிரா முதல்வராக உணர்கிறேன் - தேவேந்திர பட்னாவிஸ்

JustinDurai
'நான் முதலமைச்சர் அல்ல என்று மக்கள் ஒருபோதும் உணரவில்லை' என்று தெரிவித்துள்ளார் மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்.
2014-ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 122 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இல்லாத போதும், சிவசேனா ஆதரவுடன் அம்மாநில பாஜக தலைவராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ், முதல்வராக பொறுப்பேற்று தனது ஆட்சி காலத்தை நிறைவு செய்தார்.
2019-ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 161 இடங்களை கைப்பற்றிய அந்த கூட்டணி கட்சிகள் உடனடியாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் பதவியை இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதமாக இருந்தது. முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த கூட்டணி உடைந்தது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உடன் சேர்ந்து அரசை அமைத்தது. இதையடுத்து தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபை எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் நவி மும்பையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், ''நான் முதலமைச்சர் அல்ல என்று மக்கள் ஒருபோதும் உணரவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக நான் மாநிலத்தில் சுற்றித் திரிந்ததால் நான் இன்னும் முதல்வராக உணர்கிறேன். மக்களின் அன்பும் பாசமும் குறையவில்லை. நான் வீட்டில் உட்கார்ந்திருக்கவில்லை. மக்களுக்கு சேவை செய்கிறேன். எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக செயல்பட்டு வருகிறேன்'' என்று அவர் கூறினார்.