மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவன் pt web
இந்தியா

பட்டப்பகலில் மனைவியை நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்த கணவன்: தடுக்காமல் வீடியோ எடுத்த மக்கள்!

ஆந்திராவில் மனைவி மீது சந்தேகப்பட்டுப் பட்டப் பகலில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விமல் ராஜ்

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், அவுகு  பட்டணத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மனைவி குமாரி. ரங்கசாமிக்கு மனைவி குமாரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் குமாரி தனது சித்தி வீட்டிற்குச் சென்று, வெளியே பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது கையில் அரிவாளுடன் அங்கு வந்த ரங்கசாமி, மனைவி  குமாரியைச்  சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த, குமாரியின் சித்தி அவரை தடுக்க முயற்சி செய்தபோது, அவரையும் அரிவாளால் வெட்டியுள்ளார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், கணவன், மனைவியை வெட்டிக் கொண்டிருந்த சம்பவத்தைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு, செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். இதனையடுத்து,  குமாரி அதே இடத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த குமாரி

இச்சம்பவம்  குறித்துத் தகவலறிந்து வந்த, போலீசார்  படுகாயமடைந்த குமாரியின் சித்தியை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அதே பகுதியில் பதுங்கி இருந்த ரங்கசாமியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.