அமெரிக்கா - இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. அதேநேரத்தில், இந்த வரிவிதிப்பு இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, வங்கதேசம், பாகிஸ்தானைவிடக் குறைக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்கா - இந்தியாவின் வர்த்தக உறவை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.
அமெரிக்கா - இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவுக்கு 50 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பலசுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அது 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ”பேச்சுவார்த்தையி்ன்போது பிரதமர் மோடி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்திவிட்டு, வெனிசுலாவிருந்து அதிக எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டுள்ளார்” என அதிபர் ட்ரம்ப் தெரிவித்த நிலையில், அதன்பிறகு இந்தியாவுக்கான வரி 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதேநேரத்தில், இந்த வரிவிதிப்பு இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, வங்கதேசம், பாகிஸ்தானைவிடக் குறைக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்கா - இந்தியாவின் வர்த்தக உறவை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. எனினும், இந்தப் புதிய வரிகள் எப்போது அமலுக்கு வரும் எனக் குறிப்பிடப்படவில்லை. அதேபோல், வர்த்தக தடைகள் எவ்வாறு குறைக்கப்படும் என்பது குறித்தும், இந்தியா எத்தகைய அமெரிக்க தயாரிப்புகளை வாங்க உறுதியளித்தது என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை. இந்தியா, ரஷ்ய எண்ணெய்க் கொள்முதலை நிறுத்திவிட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து ரஷ்யாவும் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.
இதற்கிடையே கிட்டதட்ட பல மாதங்களாக இந்தப் பேச்சுவார்த்தை நீடித்து வந்த நிலையில், தற்போது விரைவாக முடிந்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அண்டை நாடான பாகிஸ்தான், அதிபர் ட்ரம்பின் புராணம் பாடியது. அதாவது, இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு அதிபர் ட்ரம்ப்தான் காரணம் என பாகிஸ்தான் தெரிவித்தது. மேலும், இதற்காக ட்ரம்புவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியது. இதனால், அமெரிக்காவும் பாகிஸ்தான் மீது அதிகம் நெருக்கம் காட்டியது. அந்த நாட்டு பிரதமர் மற்றும் ராணுவத்தின் உச்சபட்ச தலைவரை வரவேற்று உபசரித்தது. தவிர, வரியையும் 19 சதவீதமாக குறைத்தது.
ஆனால், இந்தியாவோ இவை எல்லாவற்றுக்கும் தலை சாய்க்கவில்லை. குறிப்பாக, பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்பின் கூற்றுக்கு (இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்கு) மறுப்பு தெரிவித்தார். அதுபோல், அமைதிக்கான நோபல் பரிசை விரும்பிய ட்ரம்புக்கும் பிரதமர் மோடி ஆதரவுக் கரம் நீட்டவில்லை. இதற்கிடையே, ரஷ்ய எண்ணெய்யை இந்தியா வாங்குவதை நிறுத்தாவிட்டால், அதிக வரி விதிக்கப்படும் என எச்சரித்து, அதற்காக கூடுதல் வரியும் விதித்தார். அதற்காக பிரதமர் மோடி, ட்ரம்பிடம் மோதல் போக்கையும் கடைப்பிடிக்கவில்லை; எதிர்த்துக் குரல் கொடுக்கவுமில்லை. ஆனால், இவற்றை எல்லாம் பிரதமர் மோடி, தன்னுடைய மவுனத்தாலேயே கடந்தார். ஒருகட்டத்தில், ட்ரம்பின் தொலைபேசியின் அழைப்பைக்கூட பிரதமர் மோடி ஏற்கவில்லை என அமெரிக்கா தெரிவித்திருந்தது. இதன் காரணமாகவே, இந்திய - அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை தடைப்பட்டதுடன் நீடிக்கவும் செய்தது.
இந்த நிலையில்தான், 'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்' என குறிப்பிடப்படும் வரலாற்று ஒப்பந்தம் 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனுடன் கடந்த மாத இறுதியில் கையெழுத்தானது. இது, ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் இதுவரை செய்து கொண்ட மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகும். இது இரண்டு பில்லியன் மக்களின் சந்தையை உருவாக்கும் என்றும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களின் ஏற்றுமதியில் 96.6 சதவீதத்திற்கான வரிகள் நீக்கப்படும் அல்லது குறைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும், இந்த வரலாற்று ஒப்பந்தம், இந்திய பொருட்கள் மீது அதிகவரி விதித்த அமெரிக்காவுக்கு பதிலடியாக பார்க்கப்பட்டது. இது, விரோதமான அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நம்பகமான மற்றும் நிலையான கூட்டாளியின் பிம்பத்தை வலுப்படுத்தியது. அதாவது இதன்மூலம் ட்ரம்பால் புறக்கணிக்கப்பட்ட நாடுகளுக்கு இந்தியா செல்ல வேண்டிய கூட்டாளியாக மாறியது. மிகப் பெரியதாகவும், மிகவும் துடிப்பானதாகவும் ஒரு பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் இந்தியா, நம்மைவிட்டுச் சென்றுவிடும் என்ற கணக்கில்தான் அமெரிக்கா இறங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே, அமெரிக்கா இந்தியாவுடன் வர்த்தகத்தை விரைவாக இறுதி செய்துள்ளது. இதற்கு, பிரதமர் மோடியின் மவுனமும் அரசியல் சாமர்த்தியமுமே கை கொடுத்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.