hydrogen train  web
இந்தியா

எப்படி இயங்குகிறது ஹைட்ரஜன் ரயில்? டீசல் இல்லாத புதிய தொழில்நுட்பம்!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில், ஹரியானாவின் ஜின்த் - சோனிபட் தடத்தில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. இது எப்படி இயங்குகிறது இதன் சாதகங்களும் சவால்களும் என்ன என்பதைப் பார்க்கலாம்..

PT WEB

இந்தியாவில் முழுக்க தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் டீசல் அல்லது வழக்கமான மின்சாரத்தை பயன்படுத்தாமல், தானே மின்சாரம் உருவாக்கி இயங்கும் புதிய தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. சிலிண்டரில் சேமித்த ஹைட்ரஜன், காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் ஃபுயல் செல் மூலம் இணைந்து மின்சாரம் உற்பத்தி செய்கிறது. லித்தியம் பேட்டரிகள் கூடுதல் சக்தி தர, கழிவாக வெறும் நீராவி மற்றும் சிறிய வெப்பம் மட்டுமே வெளியேறுகிறது.

முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹைட்ரஜன் ரயில் டீசலை எரித்து இயங்குவதில்லை. வழக்கமான மின்சார ரயில் போலவும் இயங்குவதில்லை. இவை இரண்டுக்கும் மாறாக, தனக்குத் தேவையான மின்சாரத்தைத் தானே தயாரித்துக்கொண்டு அதன் மூலம் இயங்குகிறது. ரயிலின் சிலிண்டர்களில் சேமிக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் வாயுவும், காற்றில் உள்ள ஆக்சிஜனும் ‘ஃபுயல் செல்’ (Fuel Cell) என்ற அமைப்பிற்குள் ஒன்றாக இணையும்போது மின்சாரம் உருவாகிறது.

hydrogen train

இந்த மின்சாரமே ரயிலின் மோட்டார்களை இயக்கி, ரயிலை நகர்த்துகிறது. ரயிலின் ஆற்றல் தேவையைச் சீராகப் பராமரிக்கவும், வேகம் எடுக்கும்போது கூடுதல் சக்தியை வழங்கவும் இதில் அதிநவீன லித்தியம் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. சுற்றுப்புறச் சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது என்பதே இதன் சிறப்பம்சம். இந்த ரயில் இயங்கும்போது நச்சுப் புகையோ, கரியமில வாயுவோ வராது.

கழிவாக வெறும் தூய்மையான நீராவியும் ((Water vapour)), சிறிதளவு வெப்பமும் மட்டுமே வெளியேறும். அதாவது, இந்த ரயில் புகைக்குப் பதிலாகத் தண்ணீரை மட்டுமே காற்றில் உமிழும். இந்தியாவின் 99 சதவீதத்திற்கு மேற்பட்ட ரயில் பாதைகள் ஏற்கெனவே மின்மயமாக்கப்பட்டுவிட்டன. எனினும், மின்சாரக் கம்பிகள் அமைக்க முடியாத கடினமான மலைப்பாதைகள், அடர்ந்த காடுகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் டீசல் ரயில்களுக்கு மாற்றாக இந்த ஹைட்ரஜன் ரயில்கள் பயன்படுத்தப்படும்.

hydrogen train

ஹைட்ரஜன் மிகவும் லேசான வாயு என்பதால், அதை அதிக அழுத்தத்தில் சிலிண்டர்களில் அடைப்பது சவாலானது. ஹைட்ரஜன் எளிதில் தீப்பற்றக் கூடியது என்பதால், ரயிலில் நவீன தீயணைப்பு மற்றும் கசிவு கண்டறியும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான உள்கட்டமைப்பு மற்றும் ரயில்களைத் தயாரிப்பதற்கான செலவு மிக அதிகம் என்று கூறப்படுகிறது.