நேரு சென்டர் இந்தியா (Nehru Centre India) வின் தொடக்க நிகழ்வு டெல்லியில் உள்ள ஜவஹர் பவனில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி சோனியா காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "நேருவின் பங்களிப்புகள் குறித்த பகுப்பாய்வு மற்றும் விமர்சனங்கள் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், அவர் எழுதிய மற்றும் கூறியவற்றை வேண்டுமென்றே திரித்திக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
நேருவை இழிவுபடுத்தும் திட்டம் இன்றைய ஆளும் அரசின் முக்கிய நோக்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களின் குறிக்கோள் அவரை அழிப்பது மட்டுமல்ல; அது உண்மையில் நமது தேசம் நிறுவப்பட்ட சமூக, அரசியல் மற்றும் பொருளாதார அடித்தளங்களை அழிப்பதாகும். அவரை ஒரு தனி நபராக மட்டுமல்லாது, இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் அவர் வகித்த உலகளாவிய பங்கையும், விடுதலைக்குப் பிறகு முன்னெப்போதும் இல்லாத சவால்கள் நிறைந்த ஆரம்ப ஆண்டுகளில் அவர் ஆற்றிய தலைமைப் பணிகளையும் குறைத்துக் காட்டுவதே” எனத் தெரிவித்திருக்கிறார். எனினும் அவர் எங்கும் பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ் என்ற பெயரைக் குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கத்து.
தொடர்ந்து பேசிய அவர், நேருவை இழிவுபடுத்தும் திட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள், சுதந்திர இயக்கத்திலும் அரசியலமைப்பை உருவாக்கியதிலும் எந்தப் பங்கையும் வகிக்காத ஒரு சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள். நேருவைப் பழித்துப் பேசுபவர்கள், “தீவிர வலதுசாரி மற்றும் கடுமையான சமுதாய விரோத கருத்தியலால் இயக்கப்படுபவர்கள்.” மேலும், அவர்கள் சமூக மற்றும் அரசியல் பாகுபாடுகளைத் தூண்டுவதையே அடிப்படையாகக் கொண்டவர்கள் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து, இந்த சக்திகள் அரசியலமைப்புக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு காட்டியவை என்றும், இந்தியாவின் நிறுவனர் தலைவர்கள் காத்து வந்த உயரிய இலட்சியங்களையும் தொடர்ந்து நிராகரித்துக்கொண்டிருக்கின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டை பாஜக நிராகரித்திருக்கிறது. நேருவின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டது காங்கிரஸ்தான் என்றும் பாஜக அல்ல என்றும் பாஜகவினர் தெரிவிக்கின்றனர். மேலும், நேருவின் ஆட்சிக் காலத்தில் நடந்த சர்ச்சைகளை காங்கிரஸ் கட்சியினர் மறைக்க முயன்றனர் என்றும், பாஜக அவற்றைப் புலப்படுத்தியது. மனிதர்கள் தவறு செய்கிறார்கள், வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்துவது அவமரியாதை அல்ல எனவும் பாஜகவினர் தெரிவித்தனர்.