Goa Nightclub Tragedy x page/𝑼𝒏𝒄𝒆𝒏𝒔𝒐𝒓𝒆𝒅 𝑴𝒆
இந்தியா

கோவா | இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து.. 25 பேர் பலி.. 6 பேர் காயம்.. பிரதமர் இரங்கல்!

வடக்கு கோவாவில் உள்ள ஓர் இரவு விடுதியில், இன்று நள்ளிரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 25 பேர் பலியாகி இருப்பதாகவும், ஆறு பேர் காயமடைந்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Prakash J

வடக்கு கோவாவில் உள்ள ஓர் இரவு விடுதியில், இன்று நள்ளிரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 25 பேர் பலியாகி இருப்பதாகவும், ஆறு பேர் காயமடைந்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவாவின் மிகவும் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றாக, பாகாவின் அர்போரா கிராம் உள்ளது. மாநில தலைநகர் பனாஜியிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் ஏராளமான கேளிக்கை இரவு விடுதிகள் உள்ளன. அந்த வகையில், இங்கு கடந்த ஆண்டு கேளிக்கை இரவு விடுதி ஒன்று திறக்கப்பட்டது. அந்த விடுதியில், இன்று நள்ளிரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 25 பேர் பலியாகி இருப்பதாகவும், ஆறு பேர் காயமடைந்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் 4 சுற்றுலாப் பயணிகளும், 14 ஊழியர்களும் அடங்குவர். மீதமுள்ள ஏழு பேரின் அடையாளம் இன்னும் அறியப்படவில்லை. விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே முதற்கட்ட தகவல்களின்படி, ”இரவு விடுதி தீ பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை” என்று முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “கிளப்பின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நெரிசல் மற்றும் சிறிய கதவுகள் காரணமாக வாடிக்கையாளர்கள் வெளியே செல்ல முடியவில்லை. அவர்களில் சிலர் தரைத்தளத்திற்கு விரைந்து சென்று அங்கே சிக்கிக் கொண்டனர். கோவாவில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை. கிளப் நிர்வாகத்திற்கு எதிராகவும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்; சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அவர், இரவு விடுதியின் உரிமையாளர் மற்றும் பொது மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்த பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ, "கோவாவில் உள்ள மற்ற அனைத்து கிளப்புகளிலும் பாதுகாப்பு தணிக்கை நடத்த வேண்டும், இது மிகவும் முக்கியமானது. சுற்றுலாப் பயணிகள் எப்போதும் கோவாவை ஒரு பாதுகாப்பான இடமாகக் கருதுகின்றனர், ஆனால் இந்த தீ விபத்து மிகவும் கவலையளிக்கிறது, மேலும் இதுபோன்ற துயரங்கள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது. இந்த நிறுவனங்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அடித்தளத்தை நோக்கி ஓடும்போது பெரும்பாலான மக்கள் மூச்சுத் திணறல் காரணமாக இறந்தனர்" என தெரிவித்துள்ளார்.