ஆந்திரப்பிரதேசம்
ஆந்திரப்பிரதேசம் முகநூல்
இந்தியா

குழந்தை திருமணத்தில் இருந்து தப்பிய மாணவி! 11 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று அசத்தல்!

ஜெனிட்டா ரோஸ்லின்

ஆந்திரப்பிரதேசத்தில், குழந்தை திருமணத்தில் இருந்து தப்பித்து, அனைத்து இடையூறுகளையும் தாண்டி, தனது கல்வியை தொடர்ந்த மாணவி, தற்போது 11 ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்து செய்திதாள்களின் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ள சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதே தனது நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிர்மலா, ஆந்திர பிரதேசம் கர்னூல் மாவட்டம், அதோனி மண்டலத்தில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்த பெண். வறுமை போன்ற காரணங்களினால் பாதிக்கப்பட்ட இப்அவரது குடும்பத்தில் உள்ள 3 பெண் குழந்தைகளை ஏற்கனவே திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

ஆகவே, நிர்மலாவையும் திருமணம் செய்து வைக்கப் போவதாக கூறியுள்ளனர். ஆனால், நிர்மலாவோ படிப்பின் மீது அதீத ஆர்வம் கொண்டவர். ஆகவே, ’திருமணம் செய்ய கூடாது’ என்று வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டதால் இதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.

இதனால், அக்கிராமத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உள்ளூர் YSRCP சட்டமன்ற உறுப்பினர் ஒய் சாய்பிரசாத் ரெட்டியை அணுகி தனது நிலை குறித்து தெரிவித்த அவர், தான் படிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், எம்எல்ஏ அம்மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து தெரிவிக்கவே நிர்மலாவின் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர், நிர்மலாவை ஆஸ்பரியில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் சேர்த்து மேற்படிப்பினை வழங்கியுள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகின அதில், 440 க்கு 421 மதிப்பெண் பெற்று முதல் பெண் பெற்று அசத்தியுள்ளார் நிர்மலா. மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான 10 வகுப்பு பொதுத்தேர்விலும் 537 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அம்மாணவி அளித்த பேட்டியில், “ நான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதுதான் எனது கனவு. குழந்தை திருமணத்தினை ஒழிக்க நான் பாடுபடுவேன். மேலும், தன்னை போன்ற பெண்களின் கனவு நனவாக வேண்டும் என்பதுதான் எனது கனவு.” என்று தெரிவித்துள்ளார்.

வறுமையை பொருட்டாக மதிக்காமல், பல தடைகளை தாண்டி கல்வியின் மீது தான் கொண்ட பற்றினால்.... தற்போது முதல் மதிப்பெண் பெற்று அசத்தியுள்ள நிர்மலாவின் வாழ்க்கை நிகழ்வு இது போன்ற பலப்பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.