இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் கவுதம் அதானியும் ஒருவர். இவருடைய இளைய மகன் ஜீத் அதானி. இவருக்கும் திவா ஷாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அது, நாளை (பிப்.7) மறுநாள் நடைபெற இருக்கிறது. இவர்களுடைய திருமணம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதற்கான கொண்டாட்டங்கள் இன்றுமுதல் தொடங்கியுள்ளன.
இவர்களுடைய திருமணத்தில் இந்திய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டுப் பிரபலங்கள் மட்டுமல்லாது உலக நாடுகளில் இருந்து முக்கிய நபர்கள் பலர் பங்கேற்பார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது ஒருசில பிரபலங்களுடன் மாற்றுத்திறனாளிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கவுதம் அதானி, “எங்களது குடும்பத்தின் வளர்ச்சி சாமானிய தொழிலாளர் வர்க்கத்தை போன்றதாகும். ஜீத்தின் திருமணம் எளிமையான மற்றும் பாரம்பரிய முறைப்படி நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், இவர்களுடைய திருமணத்தை முன்னிட்டு, மங்கள் சேவா என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், ஒவ்வோர் ஆண்டும், 500 மாற்றுத் திறனாளி பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதானி குழும தலைவர் கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத் இந்தியாவில் உள்ள எட்டு விமான நிலையங்களை நிர்வகிக்கும் அதானி ஏர்போர்ட்ஸில் இயக்குநராக உள்ளார். அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். ஜீத் அதானி விமானியாக பயிற்சி பெற்றவர். ஜீத் அதானியின் வருங்கால மனைவி திவா ஜெய்மின் ஷா. இவர் வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள். வைர வியாபாரத்தில் உலக அளவில் பெயர் பெற்றவர் ஜெய்மின் ஷா. 1976 இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், சூரத் மற்றும் மும்பையில் செயல்பாடுகளைக் கொண்ட உலகளாவிய வைர வர்த்தகத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.