ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி ஆசியப் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு $92.6 பில்லியனாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அவர் 19-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் அதானி குழுமப் பங்குகளின் உயர்வால் இவரது சொத்து மதிப்பு சுமார் $3.56 பில்லியன் அதிகரித்தது. தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் மட்டும், அதானி டோட்டல் கேஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி பவர் போன்ற பங்குகள் 3% வரை உயர்வு கண்டிருக்கின்றன. கடந்த வருடம் அதானி குழுமப் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்த நிலையில், இந்த வருடம் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி முதலிடத்தைப் பெற்றிருக்கிறார்.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி $90.8 பில்லியன் சொத்து மதிப்புடன், ஆசிய அளவில் 2-வது இடத்திற்கும், உலகளவில் 20-வது இடத்திற்கும் சரிந்துள்ளார். அதேசமயம், உலகப்பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க் $656 பில்லியனுடன் முதலிடத்திலும், $286 பில்லியனுடன் லேரி பேஜ் 2-வது இடத்திலும் உள்ளனர்.
இந்தப் பட்டியலில், லட்சுமி மிட்டல் $36.9 பில்லியன் (62-வது இடம்), ஷிவ் நாடார் $33.5 பில்லியன் (70-வது இடம்), சாபூர் மிஸ்திரி $33.2 பில்லியன் (71-வது இடம்), சாவித்ரி ஜிண்டால் $32.7 பில்லியன் (73-வது இடம்) ஆகிய இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக, 2026-ல் புவிசார் அரசியல் பதற்றங்களால் பலரின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது. குறிப்பாக LVMH சிஇஓ பெர்னார்ட் அர்னால்ட் அதிகபட்சமாக $44 பில்லியனை இழந்துள்ளார். பில் கேட்ஸ், வாரன் பபெட் மற்றும் ஸ்டீவ் பால்மர் ஆகியோரின் சொத்துக்களிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.