பூபேன் குமார் போரா எக்ஸ் தளம்
இந்தியா

அசாம் | பாஜகவில் இணையும் முக்கிய தலைவர்.. காங்கிரஸுக்கு மேலும் பின்னடைவு!

மேற்கு வங்கம், தமிழகம், புதுவையைத் தொடர்ந்து அஸாமில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Prakash J

மேற்கு வங்கம், தமிழகம், புதுவையைத் தொடர்ந்து அஸாமில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநில காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் பூபேன் குமார் போரா, அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பது, பெரும் சவாலாக அமைந்துள்ளது.

அசாம் காங்கிரஸின் முகமாகத் திகழ்ந்த பூபேன் குமார் போரா, 1990களின் தொடக்கத்தில் இருந்து அக்கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி வந்தவர். 32 ஆண்டுக்காலம் காங்கிரஸில் பயணித்த அவர், கடந்த 2013ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலர் பதவி வகித்தவர். கடந்த 2021-2025ஆம் ஆண்டு வரை அஸாம் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தார். பின்னர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டு, கவுரவ் கோகாய் நியமிக்கப்பட்டார். அசாம் காங்கிரஸில் எஞ்சியிருந்த மிகச் சில செல்வாக்குமிக்க இந்து தலைவர்களில் முக்கியமானவராக இருந்தார் பூபேன் போரா. லக்கிம்பூர் உள்ளிட்ட மேல் அசாம் பகுதிகளில் இவருக்கு வலுவான மக்கள் செல்வாக்கு உள்ளது. ’’தனிப்பட்ட பின்னடைவுகளைத் தாங்கிக்கொள்ளலாம். ஆனால், சுயமரியாதையையும் கண்ணியத்தையும் அடகுவைக்க முடியாது’’ என குறிப்பிட்டு காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார் போரா.

bhupen kumar borah

அஸாமில் தேர்தல் கூட்டணி அமைப்பதில் சிக்கல், தன்னை ஓரம்கட்டும் வகையில் மூத்த தலைவர்களின் செயல்பாடுகள், மாவட்டம் மற்றும் வட்டத் தலைவர்கள் என அடித்தள நிர்வாகிகளை காங்கிரஸ் மேலிடம் மாற்றிய விவகாரம் என தொடர்ந்து போரா அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 16ஆம் தேதி காங்கிரஸில் இருந்து விலகுவதாக கூறி,கட்சி பதவிகளை ராஜினாமா செய்தார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மேலிடத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் அளிக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், அவரை அரவணைத்துப் பேசி, முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, பாஜகவுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அவர் விலகியது காங்கிரஸுக்குப் பேரிடியாகக் கருதப்படுகிறது. போராவுடன் காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பாஜகவில் இணைய உள்ளது, அஸ்ஸாமில் காங்கிரஸின் வாக்கு வங்கியைச் சிதைக்கக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

காங்கிரஸ்

இந்நிலையில், வரும் 22ஆம் தேதி பூபேன் போரா அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைய உள்ளதாக, அவரது இல்லத்திற்குச் சென்று ஆலோசனை நடத்திய அஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டி.. தமிழகம், புதுவையில் கூட்டணி பங்கீட்டில் குழப்பம்... அஸாமில் 32 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியில் பயணித்த போரா, தேர்தல் தருணத்தில் கட்சி தாவியது என காங்கிரஸ் அடுத்தடுத்து சவால்களை சந்தித்து வருகிறது.