Rahul Gandhi X
இந்தியா

"தவறு CBSE-யினுடையது; தண்டனையோ மாணவர்களுக்கு" - ராகுல் காந்தி விமர்சனம்

விடைத்தாள்கள் மறுமதிப்பீட்டுக்காக அதிக கட்டணம் வசூலிக்கபடுவதை கடுமையாக சாடிய ராகுல் காந்தி, பிக்பாக்கெட் செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர் : M. மீரா

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, CBSE மாணவர்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடுகளுக்கு விதிக்கப்படும் கட்டணஙகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைக் கோருதல், மதிப்பெண்களை மறுக்கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்தல் ஆகியவற்றுக்கு வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணங்களைச் சுட்டிக்காட்டிய ராகுல்காந்தி, CBSE அமைப்பிலுள்ள குறைபாடுகளுக்காக மாணவர்கள் தண்டிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து ராகுல்காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ”பிக்பாகெட் அடிப்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள் – இன்று அவர்கள் CBSE-யின் உள்ளேயே அமர்ந்திருக்கிறார்கள். CBSE-யின் பிழையின் காரணமாக மதிப்பெண்கள் தவறாக வந்தால், உங்களுக்குக் கிடைப்பது என்ன? ஒரு கட்டணப் பட்டியல் மட்டுமே:

விடைத்தாளின் மின்னணு நகல் (Digital scan copy) பெற: ஒரு பாடத்திற்கு ரூ.100

மதிப்பெண் மறு கூட்டல் செய்ய: ஒரு தாளுக்கு ரூ100

மறு மதிப்பீடு செய்ய: ஒரு கேள்விக்கு ₹25

ஒரு மாணவர் தனது சொந்த விடைத்தாள் சரியாகச் சரிபார்க்கப்படுவதை உறுதிசெய்யவே, ₹2000 வரை செலவழிக்க வேண்டிய நிலை இருக்கிறது.

CBSE students

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள் - 4 லட்சம் மாணவர்கள் இது போன்ற விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும்போது, ​​CBSE மட்டும் எவ்வளவு தொகையை ஈட்டுகிறது. விடைத்தாள்களை 'போன்' மூலமாகவே ஸ்கேன் செய்திருக்கும் நிலையில், மதிப்பெண்கள் தவறாக வருவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. ஆனால் அதற்கான முழுச் செலவையும் அந்த மாணவரேதான் ஏற்க வேண்டியிருக்கிறது.

தவறு CBSE-யினுடையது. அதற்கான தண்டனையோ குழந்தைகளின் மீது விழுகிறது. ஆதாயமோ அரசாங்கத்திற்குச் செல்கிறது. கல்வி என்பது ஒரு சேவையாக இல்லாமல், ஒரு வணிகமாக மாற்றப்படும்போது, ​​தவறுகள் சரிசெய்யப்படுவதில்லை. மாறாக, தவறுகள் பன்மடங்காகப் பெருகுகின்றன. அதற்கான மிகக் கடுமையான விலையை நம் குழந்தைகள் செலுத்தி வருகின்றனர் — அதாவது அவர்கள் தங்கள் நேரம், தன்னம்பிக்கை மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை விலையாக கொடுத்து வருகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.