செய்தியாளர் - ராஜ்குமார்.ர
பிகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் என அழைக்கப்படும் ஸ்ரீ இந்திரதமனேஸ்வர மகாதேவ் கோயிலில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் கலந்துகொள்ள அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர். சுவாமியை தரிசிக்க பக்தர்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்ததாக தகவல் பரவியது. இதனை அறிந்த அங்கிருந்த பக்தர்கள் அச்சமடைந்து, உயிரைக் காத்துக்கொள்ள அலறியடித்து ஓடியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஏற்கனவே அதிகமாக இருந்த கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயன்றபோது பலர் தடுமாறிக் கீழே விழுந்ததாகவும், அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் கீழே விழுந்தவர்கள் மீதும் ஏறி மிதித்து ஓடியதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தைத் தொடர்ந்து கோயில் மற்றும் மருத்துவமனை வளாகங்களில் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய லக்கிசராய் மாவட்ட ஆட்சியர் சைலேந்திர குமார், அடுத்தடுத்து இரண்டு ரயில்கள் வந்ததால் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததாகவும், அதனைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த சமயத்தில் சுற்றுப்புறச் சுவர்கள் இடிந்து விழுந்ததாகவும், மின் கம்பங்கள் சரிந்து விழுந்து பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததாக தவறான தகவல் பரவியதால், மக்கள் அலறியடித்து ஓடியதாகவும், இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலும், நிவாரணத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கோவிலுக்கு சென்ற இடத்தில ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.