குடிநீரில் ஆபத்தான பாக்டீரியா? ரயில் நிலையங்களில் அவல நிலை! - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!
ரயில் நிலையம் என்றாலே... பயணம், கூட்டம், அவசரம் என பரபரப்பாக இருக்கும். அந்த அவசரத்தில் தாகம் எடுத்தால், ரயில் நிலையத்தில் இருக்கும் குடிநீர் குழாய்களைத் தேடிச் செல்வோம். ஆனால், அந்த குடிநீரே உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தால்? அப்படியொரு அதிர்ச்சி தகவல்தான் தற்போது வெளியாகியுள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் E. coli உள்ளிட்ட பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. CAG மேற்கொண்ட ஆய்வில் நாடு முழுவதும் 512 ரயில் நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் குடிநீர் வசதிகளும் பரிசோதிக்கப்பட்டன. தெற்கு ரயில்வேயின் கோவை, பாலக்காடு, தென் மத்திய ரயில்வேயின் ஹைதராபாத், மத்திய ரயில்வேயின் மும்பை உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களின் water coolers-ல் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் மாதிரிகளில் E. coli பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.
E. coli பொதுவாக மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலில் காணப்படும் பாக்டீரியா. மலக்கழிவு மூலம் தண்ணீர் மாசுபடும்போது, அது குடிநீரிலும் கலக்கலாம். எனினும், அனைத்து E. coli வகைகளும் ஆபத்தானவை அல்ல. சில நோயை ஏற்படுத்தும் வகைகள் வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுவலி உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம். தீவிரமான சில தொற்றுகள் சிறுநீரகத்தையும் பாதிக்கக்கூடும்.அதேநேரத்தில், குடிநீரில் E. coli கண்டறியப்பட்டது என்றாலே அதை குடித்த அனைவருக்கும் உயிருக்கு ஆபத்து என்று அர்த்தமில்லை. ஆனால், தண்ணீர் மலக்கழிவால் மாசுபட்டிருக்கலாம் என்பதற்கான முக்கிய எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஆய்வு செய்யப்பட்ட 512 ரயில் நிலையங்களில் 458 நிலையங்களில், அதாவது சுமார் 89 சதவீத நிலையங்களில், பயணிகளுக்கான அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. கழிவறைகள், சிறுநீர் கழிப்பிடங்கள், குப்பைத் தொட்டிகள், இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளிலும் குறைபாடுகள் இருப்பதாக CAG தெரிவித்துள்ளது.
இதையடுத்து, நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் இடங்களில் ‘Tank to Tap’ என்ற குடிநீர் வடிகட்டுதல் மற்றும் கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில் பயணிகளுக்கு குடிநீர் என்பது அத்தியாவசியமான வசதி. இந்நிலையில், சில ரயில் நிலையங்களின் குடிநீர் மாதிரிகளில் E. coli கண்டறியப்பட்டிருப்பது, பயணிகளிடையே அட்சதை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர

