Arvind Kejriwal, Manish Sisodia  web
இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிப்பு | ”சிபிஐ வாதங்கள் கற்பனையானவை” - நீதிமன்றம் கண்டனம்.!

”கலால் கொள்கையில் எந்தவிதமான சதித்திட்டமோ அல்லது குற்றவியல் நோக்கமோ இல்லை" என மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கூறியுள்ளது .

PT WEB

2021-22 டெல்லி கலால் கொள்கை மூலம் தனியாருக்கு லாபம் ஏற்படுத்தித் தந்து, லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அரவிந்த் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா மற்றும் 23 பேரை குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்துள்ளது .

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவரும் இன்று (பிப்.27 வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளனர். சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக சிறப்பு நீதிபதி ஜிதேந்தர் சிங் வழங்கிய தீர்ப்பில், மதுபானக் கொள்கையை வகுத்ததில் எந்தவிதமான சதித் திட்டமோ அல்லது குற்றச் செயலுக்கான உள்நோக்கமோ இருந்ததற்கான ஆதாரம் இல்லை எனவும் சிபிஐ முன்வைத்த வாதங்கள் அனைத்தும் வெறும் கற்பனையானவை .

Arvind Kejriwal

புலனாய்வு அமைப்பின் வாதங்கள் நீதிமன்றத்தின் சட்டபூர்வ ஆய்வுக்கு உட்பட்டதாக இல்லை. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 23 பேர் மீதும் எந்தவொரு முதற்கட்ட ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை. குற்றப்பத்திரிகையில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் நீதிமன்றம் சுட்டி காட்டியுள்ளது எனவே, அவர்கள் அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, ஆதாரம் இல்லாமல் அவர்களை சிறையில் வைத்ததாக சிபிஐ க்கு டெல்லி ரோஸ் அவன்யு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, சிபிஐ மீது துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரைப்பதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

2021-22 ஆம் ஆண்டு டெல்லி அரசு கொண்டு வந்த புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குத் தொடர்ந்தன. இதன் காரணமாக மணீஷ் சிசோடியா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நீண்ட காலம் சிறையில் இருந்தனர். பின்னர் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரமே இல்லை என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இது, ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. 'டிஸ்சார்ஜ்' என்பது ஒரு நபர் மீது விசாரணை நடத்துவதற்குத் தேவையான முகாந்திரமே இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாகும். இது வழக்கின் ஆரம்பக்கட்டத்திலேயே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முழுமையான விடுதலையாகும்.

Arvind Kejriwal

தீர்ப்புக் குறித்து செய்தியளர்களிடம் பேசும் போது உடைந்து அழுத அர்விந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மியை முடிவுக்கு கொண்டு வர மோடி மற்றும் அமித் ஷாவின் சதித்திட்டம் என்று கூறினார். மேலும், உண்மை வெற்றி பெறும் என்று நம்பினோம். சட்ட அமைப்பின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது என்றும் அதிகாரத்திற்காக அரசியல் விளையாட்டுகளை விளையாட வேண்டாம். அதிகாரம் வேண்டுமென்றால் நன்றாக வேலை செய்யுங்கள் என்றும் கூறியுள்ளார்.