சத்தீஸ்கர்| பழங்குடியினத் தலைவர் உட்பட ஒரு வருடத்தில் 66 காவல் மரணங்கள்!
சத்தீஸ்கர் சட்டமன்றத்தில் 66 காவல் மரணங்கள் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல், இந்த மரணங்களை அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்ட கொலைகள் என குற்றம் சாட்டியுள்ளார். ஜீவன் தாக்கூர் மரணம் மருத்துவ அலட்சியத்தால் ஏற்பட்ட கொலை எனவும், முழுமையான விசாரணை தேவை எனவும் அவர் வலியுறுத்தினார்.
சத்தீஸ்கர் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் நான்காவது நாள் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரின் போது துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான விஜய் சர்மா ஜனவரி 2025 முதல் ஜனவரி 31, 2026 வரையில் 66 கைதிகள் காவல் நிலையத்தில் விசாரணையின் போது இறந்ததாக அறிவித்தார் .
இந்த 66 வழக்குகளில், 18 வழக்குகள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) வழிகாட்டுதல்களின்படி நடத்தப்பட்டு நீதித்துறை மாஜிஸ்திரேட் விசாரணைகள் முடிக்கப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள 48 வழக்குகள் மீதான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் 66 கைதிகளின் மரணம் ஆரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட கொலைகள் என்று குற்றம் சாட்டினார். மேலும் காவல் மரணங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜீவன் தாக்கூரின் காவல் மரணம் மருத்துவ அலட்சியத்தால் ஏற்பட்ட "கொலை" என்றும் கூறினார்.
ஜீவன் தாக்கூர் ஒரு முக்கியமான பழங்குடித் தலைவர், அவர் காண்ட்கர் மாவட்ட சிறையிலிருந்து ராய்ப்பூருக்கு மாற்றப்பட்ட பின்னர் இறந்தார். ஜீவன் தாக்கூர் விஷயத்தில் சட்டமன்றக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்த உள்துறை அமைச்சர் விஜய் சர்மா, போலி சான்றிதழ் மோசடியில் ஈடுபட்டதற்காக தாக்கூர் அக்டோபர் 12, 2025 அன்று கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.
தாக்கூர் ஒரு நீரிழிவு நோயாளி என்றும், கான்கர் சிறையில் இருந்தபோது மருத்துவ ஆலோசனை அல்லது உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற மறுத்ததாகவும், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சிறந்த சிகிச்சைக்காக ராய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்
மருத்துவ ஊழியர்களுடன் அவர் ஒத்துழைக்காதது குறித்து சிறை நிர்வாகம் நீதிமன்றத்திற்கு முறையாகத் தகவல் தெரிவித்திருந்தது என்றும் கூறினார்.
இதற்கு பதிலளித்த பேசிய பாகேல், அமைச்சரின் அறிக்கை குறித்து கேள்வி எழுப்பினார், எந்தவொரு நோயாளியும் ஏன் வேண்டுமென்றே தங்கள் நிலையை மோசமாக்கிக் கொள்வார்கள் என்றும் கேள்வி எழுப்பினார் .
“உள்துறை அமைச்சர் எங்கள் கேல்விகளுக்கு சரியாக பதிலளிக்கவில்லை. 66 காவல் மரணங்கள் குறித்த பட்டியலோ, விவரங்களோ, விளக்கமோ உள்துறை அமைச்சரிடம் இல்லை" என்று பாகேல் குற்றம் சாட்டியுள்ளார்.

