இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வின்சோ நிறுவனம் மற்றும் அதன் கணக்கியல் நிறுவன அலுவலகங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, வின்சோ செயலி மூலம் பணயம் வைத்து விளையாடும் விளையாட்டுகளில், வாடிக்கையாளர்கள் மற்ற மனிதர்களுடன் விளையாடுவதாக நினைத்துக் கொண்டிருக்கும்போது, உண்மையில் அவர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் மென்பொருள் நிரல்களுடன் விளையாட வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், வாடிக்கையாளர்களைத் திட்டமிட்டுத் தோற்கடித்து நிறுவனம் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியுள்ளது. மனிதர்களுக்கும் பாட்களுக்கும் இடையே நடந்த போட்டிகள் மூலம் 'ரேக் கமிஷன்' என்ற பெயரில் சுமார் ₹802 கோடி வரை குற்றச் செயல்கள் மூலம் பணம் ஈட்டப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஆன்லைன் பணப்பந்தய விளையாட்டுகளுக்குத் தடை விதித்த பிறகும், வாடிக்கையாளர்களின் ₹43 கோடி பணத்தை அந்நிறுவனம் திருப்பித் தராமல் தன் வசம் வைத்துள்ளது. மோசடி மூலம் ஈட்டப்பட்ட பணத்தில் சுமார் 54 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ₹450 கோடி) அமெரிக்கா மற்றும் சிங்கப்பூருக்கு முதலீடு என்ற பெயரில் அந்நிறுவனம் கடத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள "WINZO US Inc" என்ற நிறுவனம் ஒரு போலி நிறுவனம் என்பதும், அதன் அனைத்து செயல்பாடுகளும் இந்தியாவிலிருந்தே இயக்கப்படுவதும் தெரியவந்துள்ளது. கடந்த, டிசம்பர் 30, 2025 அன்று நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, WinZO நிறுவனத்திற்குச் சொந்தமான ₹192 கோடி மதிப்பிலான வங்கி இருப்புக்கள், வைப்புத் தொகைகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது .முன்னதாக நவம்பர் 18, 2025 அன்று அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்கள் தங்கள் வாலட்டில் வைத்திருந்த பணத்தை எடுக்க விடாமல் தடுத்தது உட்படப் பல்வேறு முறைகேடுகளில் வின்சோ நிறுவனம் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்துத் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.