senthil kumar dmk mp
senthil kumar dmk mp ani
இந்தியா

சர்ச்சை பேச்சு; மக்களவையில் மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி செந்தில்குமார்- ஒரே நாளில் நடந்த திருப்பம்!

Prakash J

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் நேற்று (டிச.5) மக்களவையில் பேசிய திமுக எம்பி செந்தில்குமார், ”ஹிந்தி பேசும் மாநிலங்களை நாங்கள் ’கோமூத்ரா மாநிலங்கள்’ எனக் கூறுவோம். அந்த மாநிலங்களில் பாஜகதான் வெற்றி பெற்று வருகிறது” எனக் குறிப்பிட்டார். இது சர்ச்சையானதைத் தொடர்ந்து, திமுக அங்கம் வகிக்கும் I-N-D-I-A கூட்டணிக் கட்சிகளே, மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்தன.

இதையடுத்து, திமுக எம்.பி. செந்தில்குமார், தாம் பேசிய கருத்துக்கு மன்னிப்பு தெரிவித்தார். மேலும், செந்தில்குமாரை, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டித்ததாக, அக்கட்சியின் தரப்பில் இருந்தும் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், இன்று தொடங்கிய மக்களவையில், திமுக செந்தில்குமார் பேசிய கருத்துக்கு எதிராக பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். 'அவர், மன்னிப்பு கேட்க வேண்டும்' என பாஜகவினர் மற்றொரு திமுக எம்.பியும், நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான டி.ஆர்.பாலுவிடம் அவர்கள் வலியுறுத்தினர். இதனை அடுத்து மக்களவையில் தனது பேச்சைத் திரும்பப் பெறுவதாக திமுக எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் இன்று பேசிய அவர், “இந்த அவையின் உறுப்பினர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நேற்று நான் பேசிய வார்த்தையைட்ரும்ப பெற்றுக்கொள்கிறேன். எனது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.