நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடந்து வந்த இந்தப் போராட்டம் ஜூலை 20-ம் தேதி மாணவர்கள், காவல்துறையினர் இடையேயான மோதலாக மாறியது. இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசுதல் போன்ற தாக்குதலால், 6 வயது சிறுவன் உட்பட 100-க்கு மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, டெல்லியில் போராடி வருபவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் தொடங்கின.
இந்தச்சூழலில் தான், இளைஞர்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் ஜூலை 26-ம் தேதி மத்திய கல்வித் துறை அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்த வழக்குப்பதிவும் செய்யக்கூடாது. கைது செய்யப்பட்டவர்களும் விடுவிக்கப்பட வேண்டும். முறைகேட்டால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்ற கோரிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதியளித்த நிலையில், போராட்டங்கள் முடித்துக் கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் தான், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் போது டெல்லி காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட 13 வழக்குகளையும் முடித்து வைக்கவும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கவும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பான போராட்டங்கள் தொடர்பாக டெல்லி காவல்துறையினரால் ஜூலை 29 மாலை 6 மணி வரை மொத்தம் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. சைலேந்திர மணி திரிபாதி Vs மத்திய அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், டெல்லி துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுடன் இந்த முக்கிய முடிவை டெல்லி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.